Thursday, January 27, 2011

யோகாவில் அழகு


யோகாவின் உதவியால் உடலை கட்டுக்குலையா மல் காப்பாற்ற முடியுமா? என்ற கேள்விக்கு தனது வி.ஐ.பி. கஸ்டமர்களைக் காட்டி `கண்டிப்பாக முடியும்’ என்று கூறுகிறார் இந்திய பிரபலங்களின் யோகா பயிற்சியாளர் பாயல் கித்வானி திவாரி. “2003-ம் ஆண்டில் நான் யோகாவைப் பற்றி அறிந்து கொண்டேன். யோகா பயிற்சியில் என்னுடைய உடல் மற்றும் மனதில் புத்துணர்ச்சியும் கட்டுக்கோப்பும் கிடைத்தது. இதனை பிறருக்கு பயனுள்ள வகையில் தற்போது பயிற்சியாக கொடுத்து வருகிறேன். நல்ல பலன் கிடைக்கிறது. எல்லோரும் என்னிடம் `யோகாவின் மூலம் உடல் அழகை மேம்படுத்த முடியுமா?’ என்று கேட்கிறார்கள்… கண்டிப்பாக முடியும்”.
தனது யோகா அனுபவங்கள் குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய குறிப்புகளை இங்கே பார்ப்போம்,
* யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும்.
* யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்களது இளமையின் காலம் நீடிக்கும்!
* நாம் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் ஆற்றலை நமக்கு கொடுக்கிறது யோகா பயிற்சி. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும்.
* யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது மிகவும் தவறு. உடல் எடை குறைவு மற்றும் உடல் கட்டுக்கோப்புக்கு யோகா மிகவும் அத்தியாவசியமானது. மேலும் செயற்கையை தவிர்த்து, எவ்வித பிரச்சினையும் இல்லாமல், இயற்கையாக உடல் எடை குறைய யோகா மட்டுமே சிறந்த வழி.
* நீங்கள் எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ… அதைப் பொறுத்து உங்களுடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி.
* யோகாசனம் செய்யும்போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து அவற்றின் இயக்கம் சீராகும். மற்ற பயிற்சிகளைவிட யோகாவில் மட்டுமே, ரத்த ஓட்டம் முகம் மற்றும் சருமத்தின் மீதும் பாய்ந்து உடல் அழகை பாதுகாக்கிறது. இதனால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் குணமடையும்.
* யோகா உடம்பை சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு இடுப்பில், சிலருக்கு தொடையில், சிலருக்கு முதுகில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு மேல் வயிற்றில், சிலருக்கு மார்பில் பருமன் வெவ்வேறு வடிவில் இருக்கும். குறிப்பிட்ட யோகாசனத்தை மட்டும் செய்தால் போதும். உடல் முழுவதும் ஒரே மாதிரியாக சீராகும்!

வைரத்தின் வரலாறு



வைரம்!
இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.
உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் “வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்” என்ற பழமொழியும் வந்தது.
வைரம் எப்படி உருவாகிறது?

பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.
வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது ?
வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster)என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும்.
இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.
வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள்?
இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds)என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.
ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.
சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ?
ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள்.
உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்.

ப்ளு ஜாகர்(Blue Jager)வைரம் என்றால் என்ன ?
தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.

வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?
ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.

இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது?
இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.

பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன?
முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut)என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.

வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே,அதனை விளக்கவும்?
வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.
பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை Hardness என்கிறோம்.

வைரத்தில் தோஷம் என்றால் என்ன?
அடிப்படையில் வைரம், நன்றாக ஒருங்கிணைந்த கார்பன் மூலக்கூறுகளால் ஆனது. ஒரு வைரம் உருவாகும் போது, சில சமயம் இயற்கையில் முழுமையான கட்டமைப்பு இல்லாத கார்பன் மூலக்கூறுகளின் அணுக்கள் வைரத்தின் உள்புகுந்து இணைந்து அதனோடு வளர்ந்து விடும். இவை கறுப்பு நிறம் கொண்டவை. இதற்கு மற்றொரு வேதியியல் பெயர் கிராபைட்.வைரம் பட்டை தீட்டியதும் இது உள்ளே தனியாக கறுப்பாக காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் Black Pique / Black Spot என்பார்கள். நம் நாட்டில் இதற்கு தோஷம் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது?
வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.

இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது?
கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.
இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது? தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது.

Monday, January 24, 2011

அயோக்கிய அரசியல்

குடிசை வீடுகளை மாற்றி காங்கிரீட் வீடு கட்டும் தமிழக அரசின் திட்டத்தின்படி ஒரு வீட்டிற்கு மத்திய அரசு ரூ. 45 ஆயிரம் வழங்குவதாகவும், தமிழக அரசு ரூ.15 ஆயிரம் மட்டும் வழங்கும் நிலையில் அந்த திட்டத்திற்கு கருணாநிதியின் பெயரை வைத்தது நியாயமா என்று காங்கிரசுக் கட்சியின் இளங்கோவன் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது எங்கள் காசைப்பயன்படுத்திக் கொண்டு உங்கள்பெயரை மக்களிடம் பிரபலமாக்குவது சரியா என்பதை அவரது கேள்வி.

இதற்குப் பதிலளித்த கருணாநிதி, இளங்கோவன் கூறும் திட்டம் ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு அங்கமாக இருக்கும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் என்றும், இது 1997 – 98 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும், இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் வாழும் வீடில்லாத ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், கொத்தடிமைகளாக விடுவிக்கப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மற்ற பிரிவு மக்கள் ஆகியோருக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்படுமென்றும், இதற்கு 75 : 25 என்ற விகிதத்தில் மத்திய – மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கும் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கும் எந்த சம்பந்தமில்லை என்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு 21 இலட்சம் வீடுகளைக் கட்டும் திட்டம் 2010 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த ஆண்டு மட்டும் மூன்று இலட்சம் வீடுகள் ரூ. 1800 கோடியில் கட்டப்படும் என்றும் கருணாநிதி விளக்கியுள்ளார். இதன்படி மீதமுள்ள 18 இலட்சம் வீடுகளுக்கான நிதி 10,800 கோடி வருகிறது. இந்த தொகையை எப்படி ஒதுக்கப் போகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க இத்திட்டத்தின்படியே ஒரு வீட்டிற்கு ஒதுக்கப்படும் தொகை ரூ. 60,000 என்றுவருகிறது.

இந்த ரூபாய்க்கு குடிசை வீடு கூட கட்ட முடியாத இன்றைய காலத்தில் காங்கிரீட் வீடு எப்படி கட்ட முடியும்? ஒருவேளை கட்டினாலும் அதன் தரம் எப்படி இருக்கும் என்பது புரிகிறது. இறுதியில் இந்த வீடுகளைக் கட்டும் முகாந்திரத்தில் அதிகாரிகள், கட்சிக்காரர்கள், முதலாளிகளும்தான் சம்பாதிக்கப் போகிறார்கள். மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் தி.மு.க அரசு நிகழ்த்தப் போகும் மற்றுமொரு மோசடி. சரி, இது எப்போதும் உள்ள கதைதானே? இனி விசயத்திற்கு வருவோம்.

இந்த விளக்கத்தின் மூலம் கருணாநிதி என்ன சொல்கிறார் என்றால் காங்கிரீட் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி பயன்படுத்தப்படவில்லை, முற்றிலும் மாநில அரசு நிதிதான் பயன்படுத்தப்படுகிறது என்பதால் இதற்கு கலைஞர் என்ற பெயர் வைத்ததில் எந்த தவறுமில்லை என்பதே. அதாவது உங்க முதலாளிகளது பணத்தையல்ல, எங்கள் வீட்டுப் பணத்தை பயன்படுத்தும் திட்டத்திற்கு எங்கள் பெயர்தானே வைக்கமுடியும் என்று நியாயம் கேட்கிறார் கருணாநிதி. கூடுதலாக இளங்கோவனது பேச்சு கூட்டணியை வலுப்படுத்தாமல் ‘வலி’ப்படுத்துகிறது என்று வேறு புலம்பியிருக்கிறார்.

இறுதியில் இந்த அக்கப்போரிலிருந்து நாம் பெறும் விளக்கம் என்ன? மத்திய அரசு என்பது நேரு குடும்பத்தின் சொத்து, மாநில அரசு என்பது கலைஞர் குடும்பத்தின் சொத்து. இருவரும் மக்கள் வரிப்பணத்தை வைத்தே அரசின் செலவுகளை செய்கிறார்கள் என்றாலும் ஏதோ அவர்களது சட்டை பாக்கெட்டிலிருந்து செலவு செய்வதாக கருதிக் கொள்கிறார்கள். அதனால்தான் அனைத்து திட்டங்களும் நேரு, இந்திரா, ராஜீவ், கலைஞர் என்ற பெயர்களைத் தாங்கி வருகின்றன.

இலவச டி.வி என்றால் அது கலைஞர் கொடுத்தது, இலவச மருத்துவக் காப்பீடு என்றால் அது கலைஞர் கொடுத்தது, ஒரு ரூபாய் ரேசன் அரிசியும் அவர் கொடுத்தது, இப்படி தமிழகத்தின் எல்லா திட்டங்களும் கலைஞர் தான் சேர்த்து வைத்த குடும்பச் சொத்திலிருந்து கொடுப்பது போல கருதிக் கொள்கிறார். நேரு குடும்பமும் அப்படியே கருதிக் கொள்கிறது. உண்மையில் கலைஞர் குடும்பத்தின் வருமானம் என்பது ஆசியப் பணக்காரர் பட்டியலில் வரும் தகுதி கொண்டது. அந்த ஆயிரக்கணக்கான கோடிகளே தமிழக மக்களை சுரண்டிச் சேர்த்த பணம்தான். அதிலிருந்து ஒரு காசு கூட சமூகத்திற்கு செலவழிக்காதவர்கள் மக்கள் பணத்தை செலவு செய்வதைக் கூட தமது சொந்த பணத்தை செலவு செய்வது போல பேசுவதும், எண்ணுவதும் எவ்வளவு அயோக்கியத்தனம்?

மக்களும் கூட அப்படித்தான் எண்ணுகிறார்கள் என்பதால் எல்லா ஓட்டுக்கட்சிகளும் இத்தகைய நடைமுறைகளை பச்சையாகக் கையாள்கின்றன. மேலும் மக்கள் வரிப்பணத்திலிருந்தே இவை அமலாக்கப்பட்டாலும் மக்களை ஏதோ பிச்சைக்காரர்கள் போல சித்தரிப்பதும், காங்கிரசு, தி.மு.க கோமான்களை தர்மம் செய்யும் பண்ணையார்களாக காட்டுவதும் மகா மட்டமாக இருக்கிறது.

இந்த திட்டங்கள் எங்கள் பணத்திலிருந்துதான் வருகிறது என்ற உணர்வை மக்கள் பெறாத வரைக்கும் இந்த தர்மவான்களது அயோக்கியப் பெயர்கள் மறையப் போவதில்லை.

இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின்{ஏழைகளின்} புரட்சி.

இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி.

ஹிமான்ஷு குமார், இவர் ஒரு காந்தியவாதி. ஒரு சுதந்திரப் போராளியின் மகன். சட்டீஷ்கர் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய தண்டிவாடா மாவட்டத்தில் ஆதிவாசி மக்களிடையே பணியாற்றிவருபவர். 17 ஆண்டுகளாக அயராத உழைப்பால் கட்டப்பட்டுவந்த வனவாசி சேத்னா ஆசிரம் என்ற அவரது அறநிலையம் ஜனநாயகக் கடமையின் [தேர்தல்] முடிவுகள் வெளியான மறுநாள் முடிவுக்கு வந்தது. 17.5.2009 அன்று 500 போலீசார் அரைமணி நேரத்தில் அதை இடித்துத் தரைமட்டமாக்கினர். இந்தப் பயங்கரப் புழுதிகளை எல்லாம் அலட்சியமாய் உதரிவிட்டு, தங்களுக்காகப் பேச வக்கில்லாத அந்த ஆதிவாசி மக்களுக்காகப் பேசுகிறார் ஹிமான்ஷு குமார்.

அந்த ஆதிவாசிகளின் கல்வி அறிவின்மைக்கும், அவர்களுக்கு உள்ள உரிமை பற்றிய அவர்களின் அறியாமைக்கும் எதிராக இதுநாள்வரை சலியாது போராடிய அவர், இன்று அரசு தம் மக்கள் மீதே தொடுத்திருக்கும் இன அழிப்புப் போருக்கு எதிராகக் களத்தில் நிற்கிறார். அக்டோபர் 31 அன்று மும்பையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் ஆற்றிய உரை இதோ… .. ..

இன்றைய சடீஷ்கர் மாநிலத்தின் அடர்ந்த அந்த காடுகளில், மலைகளில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள் அந்த ஆதிவாசிகள். அவர்கள் சமூகத்தில் குற்றம் என்று ஏதுமில்லை. எனவே அவர்களுக்கு போலீசின் துணை என்றும் தேவைப்பட்டதில்லை. ஆனால் இன்று அவர்களைக் காப்பதற்காக என்று அரசு ஆயுதம் தாங்கிய படைகளை ஆயிரக்கணக்கில் அனுப்புகிறது. யாரிடமிருந்து காப்பதற்கு? தனது சொந்த பூமியிலேயே இராணுவத்தையும் வான்படையையும் அணிவகுக்கச் செய்யவேண்டியதன் அவசியம் அப்படி என்ன வந்தது?

ஆனால் இது ஒன்றும் புதிய கதையல்ல. ஏற்கனவே [டாடா ஸ்டீல் கம்பெனியுடன் பஸ்தாரில் பத்தாயிரம் கோடி ரூபாய் சுரங்க நிறுவனம் அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள் – ஜூன் 2005ல்] அந்த ஆதிவாசிகளை ஒழித்துக்கட்ட அரசு சல்வா ஜுடூம் என்ற கூலிப்படையை களமிறக்கியது. அவர்கள் அதற்கு ஒரு வழி கண்டார்கள். ஆதிவாசிகளை அவர்கள் கிராமங்களில் இருந்து அப்புறப்படுத்தி தெருவோரங்களில் காவல் நிலையத்தின் அருகே குடியமர்த்தினார்கள். காடுகளில் இருந்தால் இவர்கள் நக்சலைட்டுகளை ஆதரிப்பார்கள், அதனால்தான் காவல் நிலையத்தின் அருகே இந்த குடியமர்த்தம் என்று அதற்கொரு விளக்கமும் அளித்தார்கள். இந்த நடவடிக்கையைக் கண்டு ஆதிவாசிகள் அஞ்சினார்கள். தமது காடுகளையும், நிலங்களையும், ஆறுகளையும் விட்டுவிட்டு இந்தக் காவல் நிலையத்தின் அருகே ஏன் வரவேண்டும் என விழித்தார்கள். அதனால் மறுத்தார்கள்.

ஆதிவாசியினர் தம் கிராமங்களை விட்டு ஓடச் செய்வதற்காக மத்திய சேமக்காவல் படை, துணைராணுவத் துருப்புகள், போலீசு இவற்றுடன் சில தீய சக்திகளும் சேர்ந்துகொண்டு எல்லோருமாக அக்கிராமங்களைத் தாக்கினார்கள். பிடிபட்டவர்களை முகாமுக்கு ஓட்டிவந்தார்கள். குப்பைமேட்டை ஒத்த பகுதியில் அமைந்த முகாம்களில் 50000 ஆதிவாசிகளை பலாத்காரமாய்த் திணித்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் இயற்கைச் சூழலில் குடிலமைத்து வாழ்ந்த ஆதிவாசிகளை அரசு தகரக் கொட்டகையில் கறிக்கோழிகளைப்போல் அடைத்தது.

இக்கொடுமையை விடாப்பிடியாக எதிர்த்து நின்ற ஆதிவாசிகளோ சுட்டுக் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர், சிறுபிள்ளைகளும் கொலை செய்யப்பட்டனர். இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நக்சலிசம் பரவாமல் தடுப்பது என்ற பெயரில் பலர் ஒட்டுமொத்தமாகக் கொன்றொழிக்கப்பட்டனர். அடைக்கப்பட்ட 50000 ஆதிவாசிகளும் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமை சகியாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, ஒரிசா, மகாராட்டிரத்துக்குத் தப்பி ஓடினர். அரசுக்கு ஆதரவாய் இருப்பவர்கள் சல்வா ஜுடூம் முகாம்களில் உள்ளனர்; ஏனையோர் எல்லாம் நக்சலைட்டுகளின் பக்கமிருப்பவர்கள்; அவர்கள் காடுகளில் ஒளிந்திருக்கிறார்கள் என தொலைக்காட்சி, வானொலி மூலம் அறிவித்தார் அம் மாநில முதல்வர். ஒரு மாநில முதல்வர், காடுகளில் தங்கள் சொந்த நிலத்தில் வாழ்பவர்களை எல்லாம் நக்சலைட்டுகள் என முத்திரை குத்துவது வியப்பாக இருக்கிறது. அவர்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய்க் கொன்றொழிக்கும் முடிவையும் அறிவித்துவிடுவீரோ என்று அவரைக் கேட்டேன். அஞ்சியபடி அவர் அவ்வாறே செய்துவிட்டார்.

சிந்திக்க முடியாத அட்டூழியங்கள் எல்லாம் அரங்கேறின. ஒரே கிராமம் 20 முறை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. வேட்டை முடிந்தது என்று கருதி காடுகளில் பதுங்கிய மக்கள் கிராமம் திரும்புவர், வீடுகளை சீர்செய்து நிலங்களைப் பண்படுத்தி பயிர் செய்யத் தொடங்குவர். மீண்டும் பாதுகாப்புப் படை வரும், பயிர்நிலங்களை எரிக்கும். இப்படி இது ஒரு முடிவிலா சுழற்சியாகிவிட்டது. தொடரும் இந்த கொள்ளை, கற்பழிப்பு, கொலைகளால் வெருப்புற்ற ஆதிவாசிகள் தங்கள் பிள்ளைகளைக் காவலிருக்கப் பணித்தனர். அப்பிள்ளைகளும் தங்கள் தடிக்கம்பு, வில், அம்புகளுடன் கிராமத்தைக் காவல் காத்தனர். படைகள் தாக்க வருவதை முன்னறிந்து பெண்கள், முதியோரைப் பாதுகாப்பாய்க் காட்டுக்குள் பதுங்க வழிசெய்வதே அவர்களின் நோக்கமாய் இருந்தது. அவர்கள் தங்கள் தானியங்களை காடுகளில், பாறைகளுக்கு அடியில் பத்திரப்படுத்த வேண்டியிருந்தது. ஏனெனில் படைகள் வந்தால் அவற்றை எரித்து அழித்துவிடுவது வழக்கம்.

தங்கள் குக்கிராமங்களைக் காவல்காக்கும் இந்த சிறுவர் சிறுமியரைத்தான் அரசுக்கு எதிராய் ஆயுதம் தாங்கியிருக்கும் மாவோயிஸ்டுகள் என்கிறார் சிதம்பரம். ஆகவே, இந்த மாவோயிஸ்டுகளைக் கொன்றொழிக்கத்தான் இந்திய ராணுவத்தை ஏவுகிறார்கள் அவர்கள். உங்களோடு சண்டையிட இந்த ’நக்சலைட்டுகள்’ உங்கள் தில்லிக்கு வரவில்லை, உங்களைப்பற்றி அவர்களுக்கு ஒரு பொருட்டும் இல்லை என்று இந்த அரசியல்வாதிகளுக்கு நாங்கள் சொல்கிறோம். அவர்கள் ஆதிவாசிகள், காடுகளில் வாழ்பவர்கள். நக்சலைட்டுகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றச் சொல்லி அவர்கள் உங்களை என்றைக்குமே கேட்டதில்லை. ஆக, நீங்கள் அனுப்பும் இந்தப் படைகள் யாரைப் பாதுகாப்பதற்காக?

உண்மையில், அரசு ஏன் இந்தப் படைகளை ஆதிவாசிகள் மேல் ஏவுகிறது? கனிவளம் நிறைந்த அந்தக் காடுகளைக் காலிசெய்து கொழுத்த தொழிலதிபர்களிடம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே. அதற்காகத்தான் இந்த ஆயுதப் படைகள் அங்கே ஏராளமாய் குவிக்கப்படுகின்றன. இப்போது இந்த அரசாங்கம் சொல்கிறது, அதற்கு அமைதி வேண்டுமாம். நித்தமும் அந்த ஆதிவாசிகளை உங்கள் படை வதைக்கிறது, நீங்கள் அமைதியைப் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் அமைதி வேண்டுவது உண்மையானால், உங்கள் படைகளை ஏன் திரும்பப் பெறக் கூடாது?

அரசாங்கம் பேசத் தயாராய் இருக்கிறதாம், இன்று காலை அறிவிப்பு வருகிறது. நக்சலைட்டுகளிடம் எனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வன்முறையைக் கைவிடும்படி நான் அவர்களைக் கோரவேண்டுமாம். ஆனால் நீங்கள் அல்லவா அம்மக்களின் வாழ்விடங்களைத் தொடர்ச்சியாய்த் தாக்குகிறீர்கள். நீங்கள் அல்லவா வன்முறையைக் கையாள்கிறீர்கள். எனவே உங்கள் வன்முறைப் பாதையைக் கைவிடுங்கள் என்று நான் உங்களை வலியுறுத்துகிறேன். நீங்கள் அங்கு பிரயோகிக்கும் படைக்கு தினமும் மதுவும் மாமிசமும் பெண்களும் தேவைப்படுகிறது. அதற்காக அவர்கள் தினந்தோறும் அந்தக் கிராமங்களைத் தாக்குகிறார்கள். மக்கள் அதைத் தடுத்தால் அவர்களை நக்சலைட்டுகள் என்கிறீர்கள். வன்முறையிலிருந்து அந்த ஆதிவாசிகளைக் காப்பாற்றுங்கள் என்று என்னிடமும் கூறுகிறீர்கள். ஆனால், இந்த அரசுதான் வன்முறையாளனாய் இருக்கிறது.

700 கிராமங்கள் தாக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டன. ஆதிவாசிகளை மீள்குடியமர்த்தவும், எரிக்கப்பட்ட வீடுகளின் உடைமையாளருக்கு நட்டஈடு தரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு அவர்களை மீள் குடியமர்த்தவோ, ஒரு நபருக்குக் கூட நட்டஈடு தரவோ இல்லை. ஆகவே, நாங்கள் ஒரு சிறு முயற்சியில் இறங்கினோம். நாங்கள் அவர்களை மீள் குடியமர்த்தம் செய்கிறோம் என்று சொன்னோம், செய்தோம். ஆதிவாசிகள் திரும்ப வந்தனர், வாழ்வை, விவசாயத்தைத் தொடங்கினர். அங்கே வன்முறை இல்லை. போலீசு அந்த கிராமங்களை வளைய வந்தது, இருந்தும் அசம்பாவிதம் ஏதுமில்லை. ஆனால் இன்றோ, அந்த அமைதியான கிராமங்களை போலீசு மீண்டும் தாக்கத் தொடங்கியிருக்கிறது. உண்மை என்னவென்றால் அந்த ஆதிவாசிகள் அவர்கள் கிராமங்களில் நிலைகொள்வதை அரசு விரும்பவில்லை. அவர்களை அங்கிருந்து பிடுங்கி எரிய விரும்புகிறது. மக்கள் தங்கள் இடத்தையும் இல்லத்தையும் விட்டுத் தலைதெரிக்க ஓடச்செய்ய விரும்புகிறது. காலிசெய்த நிலத்தைத் தொழிலதிபர்களுக்குக் கையளிக்க விரும்புகிறது. உண்மையில் நீங்கள் அமைதியை விரும்புகிறீர்களா? அப்படி என்றால் அது ஒரே ஒருவாரத்திய முயற்சியில் அடையக் கூடியதே.

வன்முறையை நம்பும் நக்சலைட்டுகளுடன் எப்படிப் பேசுவது என்று அவர்கள் கேட்டார்கள். நக்சலைட்டுகளுடன் பேசவேண்டாம், உங்கள் மக்களுடன் பேசுங்கள். தண்டிவாடாவுக்கு வாருங்கள். அவர்கள் மேல் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி அவர்களிடம் கேளுங்கள் என்று நாங்கள் பதிலளித்தோம். நீங்கள் சல்வா ஜுடூம் நடவடிக்கையைத் தொடங்கியது முதல் 700 கிராமங்கள் சுடுகாடாக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் நீங்கள் ஒருவரும் வந்து அதுபற்றி விசாரித்து அறியவில்லை. குழந்தைகள் தாக்கப்பட்டார்கள், இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் .. கேட்க நாதியில்லை. நீங்கள் அங்கு போக வேண்டியதுதானே, உங்களை யார் தடுத்தது? இந்த நாட்டின் பிரதமர் அங்கு போகட்டும். நக்சலைட்டுகளுடன் அவர் பேசவேண்டாம். அவரது சொந்த குடிமக்களிடம் பேசட்டுமே.. முடியாதா? ஏன் அவர்கள் அதைச் செய்யவில்லை? ஏனென்றால் இந்த பிரச்சினை தீர்க்கப்படுவதை அரசு விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் அம்மக்களின் நிலங்களைத் திருட விரும்புகிறார்கள். மேலும், தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் அளவுக்குத் தலைக்கனம் ஏறியிருக்கிறது அவர்களுக்கு. கற்பழிப்பா.. கொலையா, எதையும் ஒப்புக்கொள்ள அவர்கள் தயாரில்லை. ஆனால், அவர்கள் அங்கு செல்ல நேர்ந்தால், அவர்கள் செயல் இன்னதென்று மக்கள் சொல்லுவார்கள். அவர்கள் படைகளல்லவா இதைச் செய்திருக்கிறார்கள்.. ஏற்க மனம் வராது, அவர்களுக்கு.

கொலைகள், கற்பழிப்புகள், எரிப்புகள், ஆள் கடத்தல்கள் என ஆயிரம் புகார்களுக்கு மேல் நாங்கள் அளித்திருக்கிறோம். ஆனால் ஒற்றை முதல் தகவல் அறிக்கைகூடப் பதியப்படவில்லை. கிராம மக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் புளுகுமூட்டைகளாக இருப்பதால் மு.த.அ பதியவில்லை என போலீசு உச்ச நீதிமன்றத்துக்கு எழுதுகிறது. மு.த.அ. சரியா, தவறா என்று போலீசு முடிவு செய்ய முடியாது, பதிவதும், ஆய்வதும் அவர்கள் கடமை என்கிறது இந்த நாட்டின் சட்டம். ஆனாலும் சட்டத்தின் காவலர்கள் முதல் தகவல் அறிக்கையைப் பதியவும் மறுக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த சம்பவத்தில் 19 ஆதிவாசிகள் சுற்றிவளைக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பெண்களும் அடங்குவர். அப்பெண்கள் கற்பழிக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டனர். ஏனையோர் சுட்டுத் தள்ளப்பட்டனர். நாங்கள் அவ்வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றோம். விசாரிக்க அவர்களுக்குத் தேதி கிடைக்கவில்லை. வாய்தா மேல் வாய்தா, அடுத்தடுத்து நீதிபதிகள் மாற்றம். அந்த ஏழை மக்கள் நியாயம் பெறுவதற்கான வழிகள் அனைத்தையும் அடைத்துவிட்டீர்கள். நீதிமன்றத்துக்குப் போனால் உங்கள் நீதி அவர்களை ஏரெடுத்தும் பாராது; போலீசிடம் போனால் அவர்கள் மீது குண்டாந்தடிகள் பேசும். கங்கிரஸ், பி.ஜே.பி. என்ற பேதமில்லாது எல்லா அரசியல் கட்சித் தலைமைகளும் போக்கிடமற்ற அம்மக்கள் மீது அமைதிப் படையை – சல்வா ஜுடூம்- ஏற்றிச் செல்கிறார்கள். நக்சலைட்டுகளிடம் செல்வது தவிர்த்த வேறு எந்த வழியை அவர்களுக்கு விட்டுவைத்திருக்கிறீர்கள்? இன்றைய தண்டிவாடாவின் நிலை என்ன? போலீசு அம்மக்களைத் தாக்குகிறது, நக்சலைட்டுகள் காப்பாற்றுகிறார்கள். இந்நிலையில், நீங்கள் அரசாங்கம் அல்லவா, மக்களைக் காப்பது உங்கள் வேலையல்லவா, தயவுசெய்து இவ்வாறு செய்யாதீர்கள், மக்களைத் தாக்காதீர்கள் என்று நாங்கள் சொல்கிறோம். நக்சலைட்டுகள் மோசமானவர்கள் என்று, நீங்கள் சொல்கிறீர்கள். இருக்கட்டுமே, அவர்களல்லவா ஆதிவாசிகளைக் காப்பாற்றுகிறார்கள்.

மூன்று தினங்களுக்கு முன் நான் ஒரு பெரிய அரசியல்வாதியை சந்தித்தேன். நக்சலைட்டுகள் என்றால் அவருக்கு பயம். ஏன் பயப்படுகிறீர்கள், நீங்கள் ஒரு ஜனநாயக நாட்டின் தலைவர் அல்லவா, என்று கேட்டேன். ஒரு ஜனநாயக நாட்டின் அரிச்சுவடியே நீங்கள் மக்களை நேசியுங்கள், அவர்கள் உங்கள் மீது நேசமாய் இருப்பர் என்பதுதானே. ஏன் பயப்படுகிறீர்கள். ஏனென்றால் மக்கள் இனியும் உங்களை நேசிக்கப் போவதில்லை, மாறாக, அவர்கள் நக்சலைட்டுகளை நேசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏனிந்த தலைகீழ் மாற்றம்? உங்கள் மீதான அவர்களது வெறுப்பின் காரணத்தைக் களையுங்கள், அவர்களிடம் செல்லுங்கள், அவர்களை நேசியுங்கள். அவர்களும் உங்களை நேசிப்பர். ஆனால், நீங்களோ படைகளை அனுப்புகிறீர்கள்.

வர்க்கப் போராட்டம் பற்றி நெடுநாட்களாகவே நக்சலைட்டுகள் மக்களிடம் கூறிவருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருநாள், ஒரு கிராமத்தைக் கடந்து நான் சென்றுகொண்டிருந்தேன். அப்போது மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒரு முதியவர் என்னை அழைத்தார். ”ஒரு பெரிய சண்டை நடக்கப்போகுதுல்ல.., நடக்கும்தானே?” என்று கேட்டார். அவர் அந்தப் போருக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்.

எனவேதான் இந்த அரசாங்கத்திடம் போர்தொடுக்காதீர்கள் என்று சொன்னேன். ஒரு போர் தொடங்கப்படுவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு போரில் இறங்கினீர்களாயின், ஒரு 50 ஆண்டுகளுக்கு நீங்கள் அதிலிருந்து மீள முடியாது. அவர்கள் ஆதிவாசிகள். நாங்கள் அவர்களை அறிவோம். பார்ப்பதற்கு அவர்கள் சாமானியர்கள் தான். ஆனால், ஆயுதங்களை இறுகப்பற்றி மாமலையாய் வெகுண்டெழுந்து நிற்பார்கள். இந்த ஆதிவாசிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, அவர்கள் [என்னைப்போல] உ.பி. காரர்கள் அல்ல. வேட்டைக்காரர்கள், கட்டிவைத்து உரித்துவிடுவார்கள். படுகுழியில் சிக்கிவிடுவீர்கள், உங்கள் படைகள் பெருத்த இழப்பை சந்திக்க நேரும். கடந்த ஐந்தாண்டுகளில் சட்டீஷ்கரில் உங்கள் ஆயுதப்படைகளின் இழப்பு பாரதூரமானது. எனவே இந்த ராணுவத் தலையீட்டை செய்யாதீர்கள் என்று சொல்கிறேன். காட்டு வேட்டைக்கு சென்ற உங்கள் கோப்ராக்கள் ஒரு நக்சலைட்டைக்கூட வேட்டையாட முடியவில்லை. கணப்பொழுதில் ஆறு கோப்ராக்களை இழந்ததுதான் மிச்சம். இரண்டு நாட்களுக்கு அவர்களது பிரேதங்களைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், வெருப்புற்றுத் திரும்பியவர்கள் வெறித்தனமாய்க் கொன்றதோ, கிழவர், கிழவிகளையும், குழந்தைகளையும் தான்.

நாம் ஒரு சமூக அமைப்பின் அங்கம் என்ற முறையில் அதனையும் அதன் உட்கிடையான வன்முறையையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். உலகெங்கும் காணப்படும் வளங்கள் அனைத்தும் யாருக்குச் சொந்தம்? நல்லது, இது நம் அனைவருக்கும் பொதுவானது. உண்மையில் ஈ, எறும்பென இப்புவியில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் கூட அது சொந்தமானது. அவற்றுக்கும் இதில் உரிமை இருக்கிறது, இல்லையா? ஆனால், மனிதர்களாய் இருக்கும் நாமோ, நாம் தான் தலைசிறந்தவர்கள் எனக் கருதுகிறோம். நமக்கே இப்புவியில் வளங்கள் அனைத்தும் சொந்தமென நினைக்கிறோம். இது எல்லோருக்கும் பொது என்கிறது இயற்கையின் விதி. ஆனால் நடப்பில் அது அவ்வாறு இல்லை. யாருக்கு எந்த அளவுக்கு இது உடைமை என்பதை எவ்வாறு தீர்மானிப்பது? ஆனால், நாம் தீர்மானித்துவிட்டோம்.. நாம் வாழும் இந்த சமூகம் ஏற்கனவே இதைத் தீர்மானித்துவிட்டது. அதற்கான முன்னுரிமைச் சட்டங்களும் எழுதப்பட்டுவிட்டன. நாங்கள் படித்தவர்கள் அதனால் எங்களுக்குக் கூடுதல் பங்கு; நீ கைநாட்டு அதனால் உனக்குக் குறைவான பங்கு. நான் மேல் சாதிக் காரன். எனவே எனக்குக் கூடுதல் பங்கு; கீழ்சாதிப் பயல்களுக்குக் குறைவான பங்கு. நான் நகரவாசி. எனவே எனக்குக் கூடுதல் பங்கு, நீ ஒரு கிராமத்தான், உனக்குக் குறைவான பங்கு.

இப்படி இந்த அசமத்துவம் நமது அங்கீகாரத்தைப் பெற்று நமது சமூக மதிப்பீடுகளிலும் இடம்பிடித்துவிட்டது. இவ்வாறு ஆனபின், அரசியல் அமைப்பும் கூட இதைச் சார்ந்தே செயல்படத் தொடங்கியது. இந்த அசமத்துவத்தைக் கெட்டிக்க வேண்டியே சட்டங்களும் இயற்றப்பட்டன. இவ்வாறாக, முதலில் சமூக அமைப்பு, தொடர்ந்து அதற்கான அரசியல் அமைப்பு, பின் அதற்குத் துணைசெய்ய ஒரு பொருளியல் அமைப்பு. இம்மூன்றும் சேர்ந்து ஒரு சமூகக் கட்டமைவாய் உருப்பெற, பணக்காரனை பணக்காரனாகவும், ஏழையை என்றும் ஏழையாகவும் பராமரிக்கும் இந்த சமூக அமைப்பில் நாமும் ஓர் அங்கமானோம். நமக்கு இந்த சமூக அமைப்பில் பிரச்சினை ஏதுமில்லை. ஏனென்றால் நமக்கு வயிறுமுட்ட உணவும், உடைகளும், வீடும், வண்டி வாகனங்களும், நம் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பும் தடையின்றிக் கிடைக்கிறது. எனவே நாம் இந்த சமூக அமைப்பில் நிறைவுகொள்கிறோம். இதை உடைக்கவோ, மாற்றவோ நமக்கு மனமில்லை. ஆனால், இந்த சமூகக் கட்டமைவால் ஒடுக்கப்பட்ட மக்கள், நமது கொழுத்த வாழ்க்கையால் அழுத்தப்பட்ட மக்கள், அன்றாடம் தாக்கப்படும் ஆதிவாசிகள், நித்தம் பட்டினியால் செத்துப் பிழைப்பவர்கள்.. இவர்கள் இந்த சமூகக் கட்டமைவை எதிர்க்கிறார்கள். இதைத் தகர்த்தெறிய விரும்புகிறார்கள். அதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஆகவே, நினைவில் கொள்ளுங்கள், இது மாவோயிஸ்டு புரட்சியல்ல, இவ்வமைப்பால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைகளின், ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சி. சற்று யோசியுங்கள், ஒருக்கால் நீங்கள் அந்தக் கடைகோடி மக்களில் ஒருவராய் இருந்தீர்களானால், கொலை, கற்பழிப்பு, ஒடுக்குமுறைகள் உங்கள் மீது ஏவப்பட்ட வண்ணம் இருக்குமானால் நீங்களும் இத்தகையதொரு புரட்சியை செய்யமாட்டீர்களா? இச்சூழலில் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள் எனப்படுவோரின் இருத்தல் ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே. நக்சலைட் என்ற பெயரில் இல்லையானால் அவன் இன்னொரு பெயரின் கீழ்ப் போராடியிருப்பான். இவ்வுலகில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்வரை போராட்டம் தவிர்க்க முடியாதது. திரு. மாவோ அவர்கள் ஒருக்கால் பிறக்கவில்லை என்றால் அந்த ஏழை மக்கள் தமது ஏழ்மை நிலைக்கு எதிராகப் போராடியிருக்க மாட்டார்களா? தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்க மாட்டார்களா? அதுபோல் காந்தி இல்லையென்றால் அவர்கள் போராடியிருக்க மாட்டார்களா? இல்லை, போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அந்த ஏழைகளுக்கு ஒரு தலைமையோ, ஒரு அமைப்போ, அல்லது வேறு எதுவோ, எதுவும் முக்கியமில்லை. அவன் போராடுவான், போராடிக்கொண்டிருக்கிறான். சில நேரங்களில் அவனை ஆதரிப்பவர் காந்தியாக இருக்கிறார், சில நேரங்களில் வினோபாவாக சில நேரங்களில் மாவோயிஸ்டுகளாக இருக்கிறார்கள். தன்னை ஆதரிப்பவர்களை அந்த ஏழை ஏற்றுக்கொள்கிறான். இதுகாரும் வீழ்த்தப்பட்டதுபோலவே, சிலநேரங்களில் அவன் வீழ்த்தப்படுகிறான். ஆனால், இந்த மூர்க்கமான சமூகக் கட்டமைவை எதிர்த்த அவனது போராட்டம் மட்டும் ஓய்வதில்லை.

இந்த ஏழைகளின் போராட்டத்தை போலீசையும் இராணுவத்தையும் வைத்து ஒடுக்கிவிடலாம் எனத் தவறாக நினைக்கிறார் திரு. சிதம்பரம். மாறாக, ஒடுக்குமுறை போராடுவோரின் உளத் திண்மையை வலுப்படுத்தவும், போராட்டத்தை நீட்டிக்கவும் மட்டுமே செய்யும். எனவே பலாத்காரத்தால் இதை ஒழித்துவிடலாம் என நீங்கள் நினைப்பது மாபெரும் தவறு. அங்கு அமைதி நிலவவேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த போர் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என நீங்கள் விரும்பினால், அங்கே செல்லுங்கள், அந்த பழங்குடியினரின் மகிழ்ச்சியைக் கூட்ட ஏதாவது செய்யுங்கள். அவர்களது பள்ளியை இழுத்து மூடினீர்கள், அங்கன்வாடியை, சுகாதார நிலையத்தை, ரேஷன் கடையை, இன்னும் அவர்கள் சந்தைகளை எல்லாம் தடைசெய்தீர்கள்.. போய் எல்லாவற்றையும் திறவுங்கள். போர் சற்று ஓயும், என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம். இதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அம்மக்களை வதைப்போம், கொலை செய்வோம். அதன்மூலம் இந்தப் போரை முடிப்போம் என்று அவர்கள் நம்புகிறார்கள். தீயைக் கம்பளத்தால் மூடினால், கம்பளம்தான் எரிந்து பாழாகும்.

காட்டுவேட்டை என்ற பெயரில், பாதுகாப்புப்படை ஒரு வீட்டில் நுழைந்து ஒரு முதியவரையும் அவர் மனைவியையும், மகனையும், 15 வயது மகளையும் குத்திக் கொன்றது. அங்கு ஒரு சண்டை இல்லை, யாரும் ஓடவும் இல்லை. ஆனாலும் போலீசும், கோப்ராக்களும் அவர்களைக் கொன்றனர். இரண்டு வயது குழந்தையைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. துப்பாக்கியின் அடிக்கட்டையால் இடித்து அதன் பல்லை உடைத்தார்கள், நாக்கை அறுத்தார்கள், பின் அதன் பிஞ்சு விரல்களை வெட்டி எரிந்தார்கள். கொல்லப்படுவதற்கு முன் அந்த மூதாட்டியின் மார்பகங்கள் அவர்களால் அறுத்தெரியப்பட்டன. அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்களாம், அரசு சொல்கிறது. உங்களுக்கு வெறி தலைக்கேறிவிட்டதா? இதைத்தான் மாவோயிஸ்டுகள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் இதை எந்த அளவுக்கு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர்கள் பலம் பெருகும். நீங்கள் இங்கு இருப்பது அவர்கள் பலத்தை அதிகரிக்கவா?

அரசு மிருகத்தனமாக நடப்பதாக அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். நீங்கள் அவர்களை நேசியுங்கள், அவர்கள் உங்கள் பக்கம் வருவார்கள். ஆனால், நீங்கள் செயல்படும் விதம் அவர்களை மாவோயிஸ்டுகள் பக்கம் செல்ல வைக்கிறது. அவர்கள் பலத்தை நீங்கள் கூட்டுகிறீர்கள்.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நிலத்தை காலிசெய்து கொடுக்கும் நடவடிக்கை இங்கு, சட்டீஷ்கரில் மட்டும் நடக்கவில்லை, உலகெங்கும் இதே கதைதான் என்று உணர்கிறேன். இந்த பூமியின் வளங்கள் எல்லாம் வேண்டாத இந்த ஏழை மக்களால் விரயமாகிறது; எனவே பொருளாதாரத்துக்கு சுமையாய் இருக்கும் இவர்களை ஒழிக்க வேண்டியதுதான் என்று உலகத்து பணக்காரர்கள் முடிவு செய்துவிட்டதாய்த் தெரிகிறது. ஆகவே, ஆகப்பலவீனமான ஆதிவாசிகள் முதலில் துடைத்தெறியவேண்டியவர்கள் ஆகியிருக்கிறார்கள். இது ஒரு இனப்படுகொலை. மொத்த சமூகமும் கொன்றொழிக்கப்பட இருக்கிறது. அடுத்த இடி தலித்துகளின் தலையில் விழும், அடுத்தது சிறுபான்மையினர் மீது. இந்த நவநாகரீக உலகம் பலகீனமானவர்களை அழித்தொழிக்கும், சக்திவாய்ந்த சிலரே இறுதியில் எஞ்சுவார்கள், அவர்கள் மொத்த உலகையும் தின்று தீர்ப்பார்கள். இந்த இலக்கை நோக்கித்தான் அவர்கள் பயணப்பட்டிருக்கிறார்கள். வலுத்தவன் எளியோரைக் கொன்றொழிக்கும் இச்செயலை, இதுதான் “சமூக டார்வினிசம்” என்று அவர்கள் இயல்பாய்க் கூறக்கூடும்.

இதுதான் நாம் வாழுகின்ற உலகம், நாம் காண்கின்ற கொடுமை. இப்போது சொல்லுங்கள் இச்செயலை நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்களா? இந்த மிருகத்தனமான முயற்சியைத்தான் இவர்கள் பஸ்தாரில் தொடங்கியிருக்கிறார்கள். நீங்கள் இதைத் தடுக்க விரும்பினால், வாருங்கள் என்னுடன். கண்ணெடுத்துப் பாருங்கள் பஸ்தாரின் கொடுமையை. எழுப்புங்கள் உங்கள் எதிர்ப்புக் குரலை. நீங்கள் அந்த ஆதிவாசிகளின் பக்கம் நில்லுங்கள். இங்கும் சரி, வேறு எங்கும் சரி, அந்த ஏழை மக்களைக் கொல்ல விடமாட்டோம் என்று அரசை நோக்கி முழங்குங்கள்.

வெளியார் அனைவரையுமே ஆதிவாசிகள் தங்கள் எதிரியாய்க் கருதும் அளவுக்கு பஸ்தாரின் நிலை இன்று படுமோசமாகி இருக்கிறது. சொந்த நாட்டின் சக மனிதனையே பகையாய்க் காணும் அளவுக்கு என்ன பயங்கரமான நிலைமை இது. இந்த நிலை நமது ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் அபாயமாக உங்களுக்குத் தோன்றவில்லையா? அந்த லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்துவிட முடியும் என இந்த அரசு நினைகிறதே .. முடியுமா? நீங்கள் அவர்களைக் கொல்ல முயற்சிப்பீர்கள். பின்னர் அவர்கள் உங்களுக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்குவார்கள்.

இவ்வுலகில் மூன்று வகையான ஏழைமக்கள் இருப்பது பற்றி முன்னர் நான் பேசிக்கொண்டிருந்தேன். சிறு வர்த்தகர்கள், தெருக்கூட்டுபவர்கள், உங்கள் வீட்டு வேலைக்காரர்கள் போன்று உங்களுக்கு சேவை செய்பவர்கள் ஒரு வகை. இவர்கள் உங்கள் தாராள மனத்தால் சற்று ஆதாயம் அடைபவர்கள். உங்களின் முன் கைகட்டி வாழ்கிறார்கள். ஏனெனில், பணக்காரர்கள் கிள்ளி இறைக்கும் தர்மங்களில் தாங்களும் காலம் தள்ளிவிட முடியும் என நினைக்கிறார்கள். எனவே, இவர்கள் உங்களுடன் சண்டை செய்வதில்லை.

தாங்கள் பணக்காரர்கள் ஆகத் தகுதியற்றவர்கள் என்று நம்புகிறவர்கள் இரண்டாவது வகையினர். இவர்கள் படிப்பறிவற்றவர்கள், விவசாயிகள். தமது ஏழ்மையோடு சமரசம் செய்துகொண்டு வாழப் பழகிவிட்டதால் இவர்கள் உங்களைத் தீண்டமாட்டார்கள்.

மூன்றாவது வகையினர் காடுகளில் வாழும் ஏழை ஆதிவாசி மக்கள். உங்களிடம் அவர்கள் எதையும் எதிர்பார்த்ததில்லை, உங்களைப் பொருட்படுத்தியதும் இல்லை. இருப்பினும் பணத்தாசையால் உந்தப்பட்டு வலிந்து சென்று அவர்களைத் தாக்குகிறீர்கள். அதனால், சில இளைஞர்கள் அவர்களுடன் இணைந்து உங்களைத் திருப்பித் தாக்குகிறார்கள். இன்று அவர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்துப் பீடுநடை போட்டு வருகிறார்கள். ஏனைய இருவகை ஏழைகளும் அவர்களோடு இணைந்தார்களாயின் இந்த சமூக அமைப்பையே அவர்கள் புரட்டிப் போடுவார்கள். எனவே, இந்த சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பது உங்கள் விருப்பமானால், உங்கள் இராணுவம்தான் பஸ்தாரில் வன்முறை வித்துக்களை விதைக்கிறார்கள் என்பதை முதலில் உணருங்கள்.

அவர்கள் சல்வா ஜுடூமைத் தொடங்குகையில் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை ஐயாயிரமாக இருந்ததாகப் போலீசுப் புள்ளிவிவரம் கூறுகிறது. அது தொடங்கப்பட்ட பின்னால், அதன் கொடுஞ் செயல்கள் தொடர்ந்த பின்னால், மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 22 மடங்கு உயர்ந்து 1,10,000 பேராக அதிகரித்து இருக்கிறது. நீங்கள் செய்துகொண்டிருப்பது என்னவென்று தெரிகிறதா என்று இந்த அரசைக் கேட்கிறோம். நீங்கள் மீண்டும் தாக்குதலில் இறங்குவீர்களானால், மிச்சம் இருப்போரும் மாவோயிஸ்டுகள் ஆவார்கள். முழுநேரப் போராளிகள் ஆவார்கள். அவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் செயல்பரப்பும் விரிவடையும். அதன் தொடர்ச்சியான விரிவு மும்பையையும், தில்லியையும் தொடக்கூடும். அவர்களை அழித்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறீர்கள். ஆனால் அவர்களை விரிந்து பரவச் செய்வீர்கள், அவ்வளவே.

************

ஆங்கில மூலம் www.nowpublic.com/satyen – தமிழாக்கம்: அனாமதேயன்

Friday, January 21, 2011

பெட்ரோல் விலை உயர்வு
பெட்ரோல் விலை உயர்வு, உண்மை என்ன? (அல்லது) எகிறும் பெட்ரோல் விலை பற்றியெரியும் சாமானியர் வயிறுகள் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையா, அப்ப ரொம்ப பணக்காரராகத்தான் இருப்பார்.
கார்களை இனிமேல் மியூசியத்தில்தான் வைக்க வேண்டும்
சென்னை சாப்ட்வேர் இன்ஜினியர் சைக்கிளில் செல்கிறார்... இப்படித் தொடங்கி,
இனிமேல் மாட்டுவண்டிதான் சிறந்த வண்டி என்பது வரை நகைச்சுவை துணுக்குகள் தொடங்கி, பரபரப்புச் செய்திகள் வரை எல்லாமே பெட்ரோல் விலை ஏற்றத்தைப் பற்றியதாக மாறிவிட்டன.
நகைச்சுவை துணுக்குகள் ஒரு பக்கம் இருக்க, உண்மை நிலைமை எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதாக இருக்கிறது. உணவுப் பொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றம், பணவீக்க விகிதம் அதிகரிப்பு போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடிகளால் இந்தியா படுகுழிகளில் விழுந்து தடுமாறி நடக்க முடியாமல் ஊர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், தலையில் இடியாய் வந்து இறங்கியுள்ளது கச்சா எண்ணெய் விலை உயர்வு. சர்வதேச சந்தையில் ஐந்தே மாதங்களில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 90 டாலர்களில் இருந்து 130 டாலராக உயர்ந்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது போக்குவரத்தை மட்டும் பாதிப்பதில்லை. காய்கறி, பால் உள்ளிட்ட பெரும்பாலான அத்தியாவசியப் பொருள்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு லாரி, மினிலாரி போன்ற வாகனங்கள் மூலமாகவே எடுத்துச் செல்லப்படுகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், நம் வீடுகளில் அடுப்பெரிவது திண்டாட்டமாகிவிடுகிறது. இந்த விலை உயர்வுக்கு இயல்புக்கு மாறான காரணம் ஏதாவது இருக்கிறதா?
அளவில் ஒரு நாளுக்கான கச்சா எண்ணெய்த் தேவை 8.5 கோடி பேரல்கள். கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபடும் முக்கிய வளைகுடா நாடுகள் ஓபெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் இந்த நாடுகளின் பங்கு தற்போதைய நிலையில் குறைவாக இருக்கிறது.
இயல்புக்கு மாறாக கச்சா எண்ணெய் விலை அமெரிக்க வர்த்தக நகரமான நியூயார்க்கில் நிர்ணயிக்கப்படுகிறது. அங்கு நிர்ணயிக்கப்படுவதற்குக் காரணம் என்ன?
உலகை அலற வைத்துள்ள இந்த விலையேற்றத்துக்கு அங்குள்ள கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டிகுரூப், ஜே.பி. மார்கன் சேஸ், மார்கன் ஸ்டேன்லி யூக வணிக நிறுவனங்கள்தான் மூலகாரணம். முதலீடு செய்வதில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனங்கள் தங்கள் லாபத்தை பெருக்குவதற்காக கச்சா எண்ணெய் விலையை இஷ்டத்துக்கு உயர்த்துகின்றன. இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர் என்றால், அதில் 30 டாலர்தான் உண்மையான விலை. எஞ்சிய 100 டாலர் இந்த நிறுவனங்களுக்கு லாபமாகச் செல்கிறது.
யூக வணிக நிறுவனங்களின் செயல்பாட்டை அமெரிக்க அரசு எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. அமெரிக்க பொருளாதார சட்டங்கள் யூக வணிக நிறுவனங்கள் லாபம் கொழிக்க ஏற்ற வகையிலேயே இருக்கின்றன. மேலும் டாலர் விலை வீழ்ச்சியையும், சரிந்துவிட்ட பொருளாதார சூழ்நிலை போன்றவற்றை சமாளிக்க முடியாமல் திணறிய அமெரிக்க அரசு, கச்சா எண்ணெய் விலை உயர்வை தனக்குச் சாதகமான ஒன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது. அமெரிக்க அரசு மட்டுமல்ல, இந்திய அரசு யாருக்குச் சார்பாகச் செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


இந்தியாவில்...
நம் நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பெரியவும், போக்குவரத்துக்கும் கச்சா எண்ணெய் பொருட்களையே பெருமளவு சார்ந்துள்ளோம். சமையலுக்கு மண்ணெண்ணெய், எரிவாயு போன்றவற்றையும், போக்குவரத்துக்கு டீசல், பெட்ரோலையுமே நாம் நம்பியுள்ளோம். நகரங்களில் பெரும்பாலான ஏழைகள் சமைக்க பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. எரிவாயு விலை 15 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. டீசலுக்கு 34 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோல் விலை பற்றி சொல்ல வேண்டியதில்லை. பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும் முறை,கணிதத்தில் புலி என்று சொல்லப்படுபவர்களைக்கூட குழப்பக் கூடியது.
இந்தியாவில் விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை அமெரிக்கா (ரூ. 44.25), ரஷ்யா (ரூ. 42.27), சீனா (ரூ. 31.30), பாகிஸ்தான் (ரூ. 44.80), மலேசியா (ரூ. 25.40) போன்ற நாடுகளைவிட அதிகம். இந்தியாவில் மட்டும்தான் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதற்குக் காரணம் வரி, வரி, வரி.
இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ. 52 ரூபாய் என வைத்துக் கொள்வோம். அதில் உண்மையான பெட்ரோல் விலை ரூ. 22 மட்டுமே. எஞ்சிய 30 ரூபாயில் பெருமளவு தொகை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் வரியாகச் செல்கிறது. இறக்குமதி ஆயத்தீர்வை ரூ. 14.25, கல்வி வரி 50 பைசா, விநியோகஸ்தர் கமிஷன் ரூ. 1, வாட் வரி ரூ. 5.50, கச்சா எண்ணெய்க்கான சுங்க வரி ரூ. 1, பெட்ரோலுக்கான சுங்க வரி ரூ. 1.50, போக்குவரத்துச் செலவு ரூ. 6. இப்படி ஒவ்வொருவரும் போடும் பெட்ரோல், டீசலில் இருந்து கிடைக்கும் வரியை நம்பியே இந்தியாவின் பட்ஜெட்டே போடப்படுகிறது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 80 அமெரிக்க டாலர்கள். அப்போது இந்திய அரசுக்கு வரி மூலம் ஆண்டுக்கு ரூ. 91,000 கோடி வருவாய் கிடைத்தது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 130 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படும் நிலையில், அரசு வழங்கும் மானியம் ரூ. 25,000 கோடிதான்.
எப்பொழுதும் வருவாயாகக் கிடைக்கும் கோடிகளைப் பற்றி மத்திய அரசு மூச்சே விடுவதில்லை. மானியமாக வழங்கும் தொகையைப் பற்றி மட்டுமே உரக்கப் பேசுகிறது. இப்படி நாட்டை ஆளும் அரசே பெட்ரோல், டீசல் வரி வருவாயை நம்பி செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தால் கொள்ளை லாபம் அடைந்து வருகின்றன.
இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணம் செய்யும் உரிமையை ரிலையன்ஸ், எஸ்ஸார், கெய்ர்ன்ஸ் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. அந்த நிறுவனங்கள் எண்ணெய் துரப்பணம் செய்ய அனுமதிக்கப்பட்டபோது, ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை வெறும் 30 அமெரிக்க டாலர்கள்தான். தற்போது அந்நிறுவனங்கள் ஒரு துரும்பைக்கூட நகர்த்தாமல், ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலர்கள் வரை தற்போது லாபம் பெற்று வருகின்றன. அத்துடன் இந்த தனியார் நிறுவனங்கள் கச்சா எண்ணெயை சுத்திகரிக்க ஒரு பேரலுக்கு அரசு 15 அமெரிக்க டாலர் மானியம் வழங்குகிறது. இப்படி கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் ஒன்றுக்கு இரண்டாக லாபத்தை அள்ளி வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், உடனே மக்கள் தலையில் அதை சுமத்தத் தயாராக இருக்கும் அரசு, இந்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு பைசாவைக்கூட கூடுதலாக வசூலிப்பதில்லை. இது எவ்வளவு பெரிய முரண்?
மற்றொருபுறம் நாட்டின் எரிசக்தி தேவையை ஈடுகட்ட வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் ஆயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் தொடர் விலையேற்றத்தால் நஷ்டத்தைச் சந்திக்கின்றன. இப்படி இந்திய அரசின் அணுகுமுறை பொதுத் துறை நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாகவும், தனியார் நிறுவனங்கள் லாபத்தை குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும்தான் முக்கியம் என்று மத்திய அரசு கருதினால் பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகரித்தல், எரிபொருள் சிக்கனம் மற்றும் ரேஷன் முறையை நடைமுறைப்படுத்துதல், மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்தல் போன்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
'ஊருக்கு இளைத்தவன் தலையில் மிளகாய் அரைப்பது' என்ற கதையாக எல்லா பொருளாதார நெருக்கடிகளையும் சாதாரண மக்கள் மேல் சுமத்துவதை அரசு முதலில் கைவிட வேணடும். ஏ.சி. கார்களில் சொகுசாகச் செல்லும் கனவான்களிடமும், கொள்ளை லாபம் அடிக்கும் தனியார் நிறுவனங்களிடமும் கூடுதலாக வரி வசூல் செய்தாலே இந்தியாவை ஒளிரச் செய்ய முடியும்.
சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?


  • ''இந்த உலகம் மனிதனுடையது அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும். பூவுலகில் இந்த மகத்தான வாழ்வியல் வலையாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த வலையை மனிதன் பின்னவில்லை. மனிதன் இந்த வலையில் உள்ள சிறிய நூலிழை மட்டுமே.மனிதனின் பேராசைமிக்க செயல்கள், வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக பூமியை ஒரு நாள் மாற்றிவிடும். பூமித்தாய்க்கு என்னவெல்லாம் நிகழ்கின்றனவோ, அவையனைத்தும் அவனது குழந்தைகளுக்கும் நிகழுமல்லவா? இந்த வாழ்க்கை வலைக்கு எதிராக அவன் என்ன செய்தாலும், உண்மையில் அவற்றைத் தனக்குத்தானே செய்து கொள்கிறான்.''-அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஃபிராங்க்ளின் பியர்ஸ், செவ்விந்திய சமுதாயத்தினரிடம் நிலங்களை ஒப்படைக்குமாறு 1854ம் ஆண்டு இட்ட உத்தரவுக்கு பதிலாக சியாட்டில் என்ற நகரில் வாழ்ந்த செவ்விந்திய தலைவர்களில் ஒருவர் தெரிவித்த கருத்து.
    உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று புவி வெப்பமடைதல். புவி வெப்பமடைதல் பிரச்சினை இன்று பூதாகரமாகி வருகிறது.
    1.வெப்பநிலை அதிகரிப்பு,
    2.கடல்மட்ட உயர்வு,
    3.தண்ணீர் பற்றாக்குறை,
    நோய்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதே புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணம்.
    சுற்றுச்சூழல் சீர்கேடும், புவி வெப்பமடைதலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ள சிக்கல்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புவி வெப்பமடைவதை குறைக்கவும் நமது வாழ்க்கை முறைகளில் மாற்றம் தேவை.ஒர் அறையைவிட்டு வெளியேறும்போது, அந்த அறையில் உள்ள விளக்குகள், ஃபேன் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களையும் அணைப்பதில் இருந்து இந்த நடவடிக்கைகளை நாம் தொடங்கலாம்.
    அதிர்ச்சியைக் குறைக்க...
    மின்சாதனங்கள் கீழ்க்கண்ட வகையில் ஒரு யூனிட் மின்சாரத்தை செலவிடுகின்றன:

    # ஏ.சி. பெட்டி ஒரு மணி நேரம் இயங்க, ஹீட்டர் ஒரு மணி நேரம் இயங்க, பிரிட்ஜ் 7 மணி நேரம் இயங்க, டிவி பெட்டி 10 மணி நேரம் இயங்க, ஃபேன் 15 மணி நேரம் ஓட, விளக்கு 29 மணி நேரம் எரிந்தால்.

    # ஹீட்டர், வாஷிங் மிஷின், ஏ.சி., பிரிட்ஜ் போன்றவை அதிக மின்சாரத்தை செலவு செய்கின்றன. ஏ.சி., பிரிட்ஜ் போன்ற குளிர்மைப்படுத்தும் கருவிகள், ஹீட்டர்களை குறைந்த அளவீடுகளில் வைத்து பயன்படுத்துங்கள். ஒரு டிகிரி செல்சியஸ் குறைத்தால்கூட பெருமளவு மின்சாரம் சேமிக்கப்படும்.

    # டிவி, டிவிடி பிளேயர் போன்ற எந்த நவீன மின்சாதனத்தையும் 'ஸ்டாண்ட்பை' நிலையில் வைக்க வேண்டாம். இதனால் மின்சாரம் தேவையின்றி விரயமாகும். பயன்படுத்தாத நேரத்தில் கம்ப்யூட்டர் மானிட்டர்களை அணைத்து வைக்கலாம். தேவைப்படாத மின்சாதனங்களை எப்பொழுதும் அணைத்துவிட வேண்டும்.

    # குண்டு பல்புகளில் 90 சதவிகித மின்சக்தி வெப்பமாக மாறி வீணாகிறது. அதேநேரம், சாதாரண குண்டு பல்பு எரிய செலவிடும் மின்சக்தியில் 20 சதவிகிதம் மட்டுமே சி.எப்.எல். விளக்கு எரியத் தேவைப்படுகிறது. எனவே, குண்டு பல்புகளை மாற்றிவிட்டு, சி.எப்.எல். விளக்குகளை பொருத்தினால் மின்செலவு குறையும், மின்கட்டணமும் குறையும். சி.எப்.எல். விளக்கு ஒன்று அதன் வாழ்நாளில் 7,000 மணி நேரம் எரியக்கூடியது.
    மின்சாரத்தை குறைவாகச் செலவு செய்யும் மின்சாதனங்களை தேர்ந்தெடுத்து வாங்கலாம். மின்சாதனங்களை சிறப்பாக பராமரிப்பதன் மூலம் மின்செலவை குறைக்கலாம்.
    இன்னும் தூரம் செல்வோர் யாரும் செய்யலாம்:
  • சிக்னலில் நிற்கும்போது வாகன எஞ்சினை அணைத்து வைக்கலாம்.

    கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 80 சதவிகித சாலைகளை அடைத்துக் கொள்கின்றன. ஆனால் அந்த வாகனங்களில் பயணம் செய்வோரது எண்ணிக்கை 22 சதவிகிதம் மட்டுமே. அதேநேரம் 75 சதவிகித சாலைப்பயணிகள் பஸ்களில்தான் செல்கின்றனர். எனவே, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கவும், அதனால் வெளியிடப்படும் புகையால் உருவாகும் நோய்களில் இருந்து தப்பவும் பஸ்களை பயன்படுத்துவோம்.
  • சென்னையில் வாழ்பவர்கள் மின்ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துலாம். நீண்டதூர பயணங்களுக்கும் ரயில்களே சிறந்தவை. விமானங்களில் செல்வதைவிட ரயிலில் செல்வது 10 மடங்கு குறைவான எரிசக்தியையே செலவழிக்கிறது.
  • அருகிலுள்ள காய்கறி கடை, மளிகைக் கடை, பால் வாங்க சைக்கிளிலோ அல்லது நடந்தோ செல்லலாம். சைக்கிள் ஓட்டுவது, நடைப்பயிற்சி உடலை சிறப்பாகப் பராமரிக்கும். நோய்கள் பெருகிவிட்ட நகர வாழ்வில் இந்த இரண்டும் ஆரோக்கியத்துக்கு அவசியம்.
    யாரும் செய்யலாம்:
  • தண்ணீரை சேமிக்க எளிதான வழி தேவைப்படாத நேரத்தில் குழாய்களை அடைப்பது, ஒழுகும் குழாய்களை சீரமைப்பது.
    தண்ணீரை நாம் எப்படி வீணாக்குகிறோம் என்பது பற்றி சந்தேகம் இருந்தால், ஒரு நாளில் எத்தனை முறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நிரப்புகிறோம் என்றும், பயணங்களின்போது குடிநீல் பாட்டில்கள் எத்தனை வாங்குகிறோம் என்றும் கணக்கிட்டுப் பார்க்கலாம்.
  • காய்கறி கழுவும்போது, பல்துலக்கும்போது, ஷேவிங் செய்யும்போது குழாயை திறந்துவிட்டுக் கொண்டே வேலை செய்ய வேண்டாம். வாளி அல்லது கப்-பில் எடுத்து பயன்படுத்துங்கள். வாளியில் தண்ணீர் நிரப்பி குளியுங்கள். ஷவரில் குளித்தால் எவ்வளவு நீர் பயன்படுத்துகிறோம் என்றே தெரியாது, தண்ணீர் தேவையின்றி வீணடையும்.
  • ஆங்கில கழிப்பறைகளுக்கு பதிலாக, இந்திய கழிப்பறைகளையே பயன்படுத்துங்கள். அதில் மிகக் குறைவாகவே தண்ணீர் செலவாகிறது. வாகனங்களை கழுவ, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஹோஸ் பைப்பை பயன்படுத்தாதீர்கள். வாளியில் பயன்படுத்தும் போது குறைவாகவே தண்ணீர் செலவாகும்.
  • வீட்டு சுற்றுப்பாதைகள், வெளிப்புறப் பகுதிகள், மரங்களைச் சுற்றி சிமெண்ட் தளம் அமைக்காதீர்கள். மழைநீர் பூமிக்குள் சென்றால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும். சமையலறையில் வெளியேறும் தண்ணீரை தாவரங்களுக்கு பாய்ச்சுங்கள்.
  • பயணங்களின்போது போதுமான அளவு தண்ணீரை எடுத்துச் சென்றால், செலவு மிச்சம். பிளாஸ்டிக் பாட்டில்கள் வீணாவதும் குறையும்.

  • இந்தியாவில் 17 கோடி பேர் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வளரும் நாடுகளில் இறந்துபோவோரில் 80 சதவிகிதம் பேர் தண்ணீர் சார்ந்த நோய்களால் பலியாகின்றனர். இப்படி ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 20,000.
  • தண்ணீர் அமிழ்தம் என்றார் ஒரு விஞ்ஞானி. எனவே, அளவோடு பயன்படுத்தாவிட்டால் அந்த அமுதும் நஞ்சாகும், அதாவது தீர்ந்து போகும்

தவளையும் பூமியும்
சுற்றுச்சூழல் செய்திகள் நாளிதழ்களின் தலைப்புச் செய்தியாவது முன்னைப் போல அரிதான ஒரு விஷயமாக இல்லை. காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா ஆற்றவுள்ள எதிர்வினை பற்றி, ஜூலை 15ம் தேதி பிரதமர் கூட்டிய கூட்டச் செய்தி பல நாளிதழ்களின் முதல் பக்கத்தில் இடம்பிடித்தது. அதற்கு சில தினங்கள் முன்பாக, வழக்கமான தரம்தாழ்ந்த அரசியல் சதியாலோசனை செய்திகளை புறந்தள்ளிவிட்டு, புலிகளின் எண்ணிக்கை குறைந்த அதிர்ச்சிச் செய்தி முக்கிய இடம்பிடித்தது. கோலா பாட்டில்களில் பூச்சிக்கொல்லிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் பேரணைகளை எதிர்க்கும் மக்கள் போராட்டங்கள் மற்றும் அது போன்ற செய்திகள் காலைஉணவு நேரங்களில் நாம் படிக்கும் வழக்கமான செய்திகள் ஆகிவிட்டன.
கொதிக்கும் தண்ணீரில் ஒரு தவளையை போட்டோம் என்றால், உடனடியாக அது வெளியே தாவிக் குதித்து தப்பிவிடும். அதே தவளையை மெதுவாக சூடாகிக் கொண்டிருக்கும் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டோம் என்றால்,அது பேசாமல் உட்கார்ந்திருக்கும், உட்கார்ந்திருக்கும், உட்கார்ந்து கொண்டே இருக்கும் - கடைசியில் அது இறக்கும் வரை.
புவி வெப்பமடைதலும் இதேபோன்று மெதுமெதுவாக நிகழும் ஒன்றே. அதன் பின்விளைவுகள் படிப்படியாக வேகமடையும். அதை நாம் உணரத் தலைப்படும்போது, எல்லாம் கையை மீறிச் சென்றுவிட்டிருக்கும்.
கடந்த பத்தாண்டுகளாக பூமி வெப்பமடைந்து வருகிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். எதிர்பார்த்ததற்கு மாறாக புவி வெப்பமடைதலின் விளைவுகள் வேகமாக நிகழ்ந்து வருகின்றன. கணிக்கப்படும் அதன் பாதிப்புகள் ரத்தத்தை உறைய வைக்கின்றன. துருவப் பகுதிகளில் நொறுங்கி விழும் பனிப்பாறைகள், ஐரோப்பாவில் எதிர்பாராத வெப்பஅலைகள், ராஜஸ்தானில் பெருவெள்ளம், உலகெங்கும் பனிச்சிகரங்கள் சுருங்கி வருகின்றன - எல்லாம் புவி வெப்பமடைதலின் பின்விளைவுகளே.
கடந்த 50 ஆண்டுகளில் பனிச்சிகரங்கள் பெருமளவு சுருங்கிவிட்டன. இதே வேகத்தில் பனிச்சிகரங்கள் உருகி வந்தால், வடஇந்தியாவில் இமயமலை ஜீவநதிகளைச் சார்ந்து வாழும் பெருமளவு மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுவர்.
புவி வெப்பமடைதலின் எதிர்விளைவுகளை அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் உள்ள மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வருவது ஒரு 'தர்மசங்கடமான உண்மை'. உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகள் புவி வெப்பமடைதல் ஏற்படுத்தவுள்ள உடனடி ஆபத்துகளை உணராமல் இருந்து வருகின்றன. இதற்கு பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்கள் உள்ளன.
இந்த நேரத்தில் எழும் முக்கியமான கேள்வி: பூமியை அழிக்கும் சக்தி படைத்த புவி வெப்பமடையும் விளைவைத் தடுக்க பன்னாட்டு அரசுகள் ஏன் பெரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றன என்பதே.
இதை அறியாமை என்று சொல்ல முடியாது, அலட்சியம் என்றே சொல்ல வேண்டும். தங்களது நடவடிக்கையும், வாழ்க்கை முறையும்தான் புவி வெப்பமடைதற்கு காரணம் என்பதை மக்கள் (குறிப்பாக பணக்கார நாடுகளைச் சேர்ந்தவர்கள்) உணராமல் இருக்கிறார்கள். அளவை மீறி பெருகிவிட்ட கார்களில் பயன்படுத்தும் எரிபொருள், நிலக்கரியால் தயாரிக்கப்படும் மின்சாரம், விமானப் பயணம், காடுகளை அழிப்பது போன்றவைதான் கடற்கரைகளை மூழ்கடிக்கின்றன, சுட்டெரிக்கும் வெயிலை உருவாக்குகின்றன என்பதை அவர்கள் உணரவில்லை
நமது ஒரே வீடான இந்தப் பூவுலகு புவி வெப்பமடைதலில் சிக்கித் திணறி வருகிறது. 6 கோடி ஆண்டுகளுக்கு முன் எரிகற்கள் விழுந்து பூமியின் 96 சதவிகித உயிரினங்கள் மொத்தமாக அழிந்தன. அதற்குப் பிறகு உலகை அச்சுறுத்தும் விளைவாக புவி வெப்பமடைதல் உருவாகி வருகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?


சுற்றுச்சூழல் மாசுபடுவதே பூமி வெப்பமடைய முக்கிய காரணம். மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கார்பன் டைஆக்சைடு, மீதேன் போன்ற வாயுக்களே சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. பூமி வெப்பமடைதவதால் மனிதகுலத்தின் வாழ்வுரிமை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இதைத் தடுத்து சுற்றுச்சூழலை காக்க நாம் வாழும் இடத்தில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
பூமியின் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் முக்கிய அச்சுறுத்தலாக இருப்பது பல்கிப் பெருகி வரும் குப்பைகளே. தெருவில் அனைவரது கண்களில் தென்படும் குப்பை பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கவர். எளிதாகவும், கையாளுவதற்கு வசதியாகவும் இருப்பதால் இன்றைய தலைமுறையினரது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் கேரி பேக் மாறிவிட்டது.
இப்படி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நாம் முறையாக அப்புறப்படுத்துகிறோமா? இல்லை. மாறாக, பூமிக்கு கேடுவிளைவிக்கும் வகையில் தெருவில் வீசுகிறோம்.
பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.
பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் ஹைட்ரோகார்பன் மற்றும் பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.
குப்பை கழிவுகளுடன் மண்ணில் பிளாஸ்டிக் பைகளை புதைப்பதால், அவை நெடுங்காலத்துக்கு மண்ணில் மக்கிப்போகாமல் தாவரங்களின் வேர்கள் ஊடுருவ முடியாமலும், மழைநீர் மண்ணுக்குள் செல்வதைத் தடுக்கவும் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய காரணமாக அமைகின்றன.
பிளாஸ்டிக் பைகளில் உள்ள உணவுப் பொருட்களை கால்நடைகள் உட்கொள்ளும்போது, கால்நடைகளின் உணவுக்குழல் அடைபட்டு அவை இறந்து போகின்றன. சில உயிரினங்கள் பேப்பர் என்று நினைத்துக் கொண்டு தவறுதலாக பிளாஸ்டிக் பைகளை உண்டுவிடுகின்றன. யானைகள், மாடுகள் இப்படி இறந்து போகும் நிகழ்வுகள் நிறைய பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கப் பழகுவோம். மற்ற நண்பர்கள், உறவினர்களுக்கும் இச்செய்தியை எடுத்துச் சொல்வோம். அவசரத் தேவைக்கு ஒன்றிரண்டு முறை பிளாஸ்டிக் பையை பயன்படுத்தினால், அந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பையோடு குப்பையாகப் போடாமல், சேமித்து மறுசுழற்சிக்கு அனுப்புவோம்.
துணிப்பைகள், சணல்பைகள், பழைய துணிகளால் தைக்கப்பட்ட பைகள், விழாக்களில் கொடுக்கப்படும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம்.
Thanks : தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஓசூர்

Thursday, January 20, 2011

கர்ப்பத்திற்க்கான அறிகுறிகள்

1. கர்ப்பத்திற்கான அறிகுறிகள் திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்? என்பது பற்றி பார்ப்போம்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.

கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.

இவை, கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.

இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :

* மாத விலக்கு தள்ளிப்போகுதல்

* குமட்டல்

* இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்

* புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்

* வாசனையைக் கண்டால் நெடி

* மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்

* மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு

* புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை

- குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கை-கால்களும் உருவாகின்றன.

இந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக் குழந்தை பாதிக்கப்படும்.

மேலும், கர்ப்பம் ஆனதாக உணர்ந்து கொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்…

1. மாதவிலக்கு நிற்பது

கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.

இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.

நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.

2. களைப்பு

பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.

3. மசக்கை

இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.

சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.

அதுசரி… இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?

கருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.

இதற்கு காரணம் என்ன?

இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.

4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.

5. மார்பகப் பகுதி மாற்றங்கள்

முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.

கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.

6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்

சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.

7. வயிறு பெரிதாகுதல்

கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.

கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.

இந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.

அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.

பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே கர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.

அந்த பரிசோதனை முறைகள் :

1. சிறுநீர்ப் பரிசோதனை

இந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும். காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

2. ஹார்மோன் பரிசோதனை

இது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம். காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை செய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை

மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து கொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.

4. கரு நெளிவுப் பரிசோதனை

கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாத வாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது `குயிக்கனிங் டெஸ்ட்’ என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.

இதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்.

3G பயன்கள்

பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் நவம்பர் முதல் நமக்கு 3ஜி சேவை பல நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து வழங்க உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெகு காலமாகவே, தகவல் தொழில் நுட்பத்தில் இந்த 3ஜி வகை சேவையினை மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாம் தாமதமாக இதனைப் பெற்றாலும், அதிக மக்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இங்கு உள்ளது. தகவல் பரிமாற்றத்தில், டேட்டா வேகமாக அனுப்பப்பட்டு பெறப்படுவதே அதன் அடிப்படையான ஒரு செயல்பாடாகும். 3ஜி இதனைத் தருவதுடன், மிகத் தெளிவான ஒலி பரிமாற்றத்தையும் தருகிறது. மேலும் ஒரே நேரத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் பரிமாற்றத்தை 3ஜி மூலம் மேற்கொள்ள முடியும். இந்தியாவில் அண்மைக் காலத்தில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமுதாய இணைய தள சேவைத் தளங்களால், டேட்டா பரிமாறப்படுவது அதிகரித்துள்ளது. அதே போல ப்ளிக்கர் மற்றும் யு–ட்யூப் போன்ற தளங்களால், வீடியோ, இமேஜ் தகவல்களும் பரிமாறப் பட்டு வருகின்றன. இவற்றுக்கு இன்னொரு காரணம், டாட்டா டொகோமோவில் தொடங்கி பல தொலைதொடர்பு நிறுவனங்கள், மிகக் குறைவான கட்டணத்தில் டேட்டா பரிமாறிக் கொள்வதற்கு அளித்து வரும் திட்டங்களாகும். பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடங்கி வைத்த 3ஜி சேவையினை, இனி பல தனியார் நிறுவனங்கள் தர இருக்கின்றன. 3ஜி சேவையில் பலப் பல புதிய தொழில் நுட்ப மாற்றங்களையும் பயன்பாடுகளையும் காண இருக்கிறோம். ஏற்கனவே முதன்மையான பயன்பாடுகளை இந்த மலரில் குறிப்பிட்டு எழுதி உள்ளோம். இன்னும் சிலவற்றை இங்கு காணலாம். 1. லைவ் டிவி – கூடவே வரும் செய்திகள்: 3ஜி மூலம் மொபைல் போனில், ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடப்படுவதை லைவ்வாக, எங்கு சென்றாலும் பார்த்துக் கொண்டே செல்லலாம். அதே போல, டிவி ஒன்றை நாடித்தான், செய்திகளைப் பெற வேண்டும் என்பதில்லை. எந்த நேரத்திலும் செய்திகள் ஒளிபரப்பப் படுவதனை, மொபைல் மூலம் பெறலாம். 2. இமெயில் மற்றும் பைல் பெறுதல்: 3ஜி மூலம் நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகளை மொபைல் போன் வழியாக, எந்த நேரத்திலும் பெற முடியும். அதே போல அனுப்பவும் முடியும். நமக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் பைல்களையும் இதே போலப் பெற முடியும். நாம் தயாரித்து வைத்துள்ள ஆவணங்களில், எந்த நேரத்திலும் எடிட் செய்து மாற்றங்களை ஏற்படுத்த முடியும். 3. மொபைல் ஒரு முனையமாக: மொபைல் போனை இனி ஒரு ஆன்லைன் டெர்மினல் போலப் பயன்படுத்த 3ஜி வழி தருகிறது. திடீரென நமக்குக் கிடைத்து வரும் இன்டர்நெட் இணைப்பு செயல்படாமல் போகும்போது, மொபைல் போனை நம் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்து, இணைய மோடம் போலப் பயன்படுத்தலாம். இதனால் எந்த நேரத்திலும் சூழ்நிலையிலும் நமக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும். 4. வீடியோ ஸ்ட்ரீமிங்: நாம் நண்பர்களுடனும், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் வீடியோ பைல்களை, எளிதாக மற்றவர்களுக்கு அனுப்ப, காண முடியும். வேகமான பரிமாற்றத்தை 3ஜி மூலம் பெற முடியும். இவற்றைப் பதிந்து கொள்வதற்கும் 3ஜி உதவிடும். 5. இணைய வழி அழைப்புகள் – வி.ஓ.ஐ.பி. (Voice Over Internet Protocol (VOIP): மிகப் பெரிய அளவில் பேண்ட்வித் எனப்படும் தகவல் பரிமாற்றத்திற்கான அலைவரிசையை, 3ஜி தருகிறது. ஏற்கனவே நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வரும் ஸ்கைப் போன்ற புரோகிராம்கள் மூலம், குறைந்த கட்டணத்தில் நம்மால் நம் நண்பர்களுடன், அவர்கள் எங்கிருந்தாலும் பேச முடியும். வீடியோ வழி உரையாடலையும் மேற்கொள்ள முடியும். 6. அதிக வேகத்தில் கூடுதல் தகவல்: பல வேளைகளில் நாம் பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்து, பின்னர் படிக்கிறோம். அதிகமாக ட்விட்டர் போன்ற தளங்களைப் பயன்படுத்துபவர்கள், அதில் உள்ள லிங்க்ஸ் தரும் இணைப்புகளை இதே போல்தான் பயன்படுத்தி வருகின்றனர். ஜி.பி.ஆர்.எஸ். வழங்கும் வேகம் மிக மிகக் குறைவாக உள்ளதால் இவ்வாறு செயல்படுகிறோம். 3ஜி மூலம் இந்தக் குறை நிவர்த்தி ஆகும். வேகமாக டேட்டா கிடைப்பதால், லிங்க் இணைக்கும் அந்த வேளையிலேயே பைல்களைக் காண முடியும். 7. துல்லிய ஒலி அனுபவம்: சிக்னல் கிடைக்கல, வாய்ஸ் விட்டு விட்டு வருது, பேசறது ஜாம் ஆகுது – போன்ற உரையாடல்களை நாம் 3ஜியில் சந்திக்க மாட்டோம். மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் ஒருவர் பேசுவதை இதன் மூலம் நாம் பெற முடியும். உங்கள் குழந்தையின் மழலையை, நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், பக்கத்தில் இருந்து பேசுவது போலக் கேட்டு ரசிக்கலாம். மொத்தத்தில், இதுவரை தொழில் நுட்ப நீண்டநாள் கனவாக இருந்த 3ஜி சேவை, இப்போது கையில் வந்துவிட்டது. சிறிய வணிகர்கள் இதன் சேவையினை முழுமையாகப் பயன்படுத்தித் தங்கள் வர்த்தகத்தினை மேம்படுத்தலாம். இன்னும் இன்டர்நெட் நுழையாத கிராமங்களில் உள்ள மக்கள், 3ஜி மூலம் அதனைப் பெறலாம். வலைமனைகளை இணையத்தில் உருவாக்கி செயல்பட்டு வருபவர்கள், இடைஇடையே இணைப்பு அறுந்து போகும் இன்டர்நெட்டை விட்டு, 3ஜி சேவை மூலம் தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். பல துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவிற்கு, 3ஜி ஒரு வரப்பிரசாதமாகக் கிடைத்துள்ளது. அனைவரும் இதனைப் பயன்படுத்தி நம்மையும் நாட்டையும் வளப்படுத்துவோம்.