Wednesday, December 25, 2013

அறுவகைச் சுவை என்ன என்ன??...



காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

சித்த மருத்துவக் குறிப்புகள்



1.நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2.தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3.தொண்டை கரகரப்பு:
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4.தொடர் விக்கல்:
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5.வாய் நாற்றம்:
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6.உதட்டு வெடிப்பு:
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7.அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8.குடல்புண்:
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9.வாயு தொல்லை:
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10.வயிற்று வலி:
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11.மலச்சிக்கல்:
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12.சீதபேதி:
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13.பித்த வெடிப்பு:
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

14.மூச்சுப்பிடிப்பு:
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

15.சரும நோய்:
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16.தேமல்:
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

17.மூலம்:
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18.தீப்புண்:
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19.மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20.வரட்டு இருமல்:
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

தச வாயுக்கள்



இதயத்தில் இயங்குவது பிராணன்.


உச்சர்க்கலத்திடை நிற்பது அபாணன்.


கந்தரசக் குழியிற் சந்திடை நிற்பது சமானன்.

நாபியினிற்பது உதானன்.
சரீர முழுவதும் வியாபித்திருப்பது வியானன்.

நீட்டமுடக்கலுங் கிளக்கலுஞ் செய்வது நாகன்.

உரோமம் புளகித்திமைப்பது கூர்மன்.

முகத்திடை நின்று தும்மலுஞ் சினமும் வெம்மையும் விளைவிப்பது கிருகரன்.

ஓட்டமும், இளைப்பும், வியர்த்தலும் விளைவிப்பது தேவதத்தன்.
உயிர்போகினும் போகாதுடலினை வீக்கித் தலைகிறுத்தகல்வது தனஞ்சயன்.

மாணவர்களிடம் இருக்க வேண்டியது என்ன...?

மாணவர்களிடம் இருக்க
வேண்டியது என்ன...? 

முனிவர் ஒருவரிடம் சீரடாகச் சேர மூன்று பேர் வந்தார்கள்.
அவர்களை மறுநாள்
தம்மை வந்து பார்க்குமாறு கூறினார்
.
மறுநாள் அவர்கள் வரும்போது தமது காதில் ஓணான் புகுந்து தாம் இறந்துவிட்டதாக சொல்லச் சொன்னார்.
மறுநாள் அந்த மூவரும்
வந்தபோது முனிவரின்
மனைவி அவ்வாறே சொன்னார்.

முதலாமவன்,
"அவரது
ஜாதகப்படி சனிதிசை என்பதால் இப்படி ஆகியிருக்கும்!"
என்று வருத்ததோடு கூறிவிட்டு
அங்கே நிற்காமல் சென்று விட்டான்.

இரண்டாமவன், "முனிவரின் முன் ஜென்ம வினைப்படி இப்படி நடந்திருக்கலாம்!" என்று சொல்லிவிட்டு அவனும் கவலையுடன் சென்று விட்டான்.

மூன்றாமவன், முனிவரின்
மனைவி முகத்தை உற்றுப் பார்த்தான்.
பின்னர் ஆணித்தரமாக. "முனிவர்
உயிரோடுதான் இருக்கிறார்!"
என்றான்.
அதுவரை வீட்டுக்குள்
ஒளிந்து கொண்டிருந்த முனிவர்
வெளிப்பட்டார்.
"எப்படிக் கண்டுபிடித்தாய்?"
என்று கேட்டார்.
"அய்யா, உங்களின் மறைவினால்
வரக்கூடிய துக்கம் உங்கள் மனைவியின்
முகத்தில் கொஞ்சமும் இல்லை.
அடுத்தது ஒருவரின் காதினுள் ஓணான் நுழைவது என்பது நடக்காத காரியம்.
எனவேதான் அப்படி உறுதியாகச்
சொன்னேன் என்றான்.
விவேகத்தோடு சிந்திக்கத் தெரிந்த அவனையே தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். முனிவர்.
எனவே மாணவர்களுக்கு வேகம்
மட்டுமே முக்கியமில்லை. விவேகமும்
கட்டாயம் வேண்டும்.

இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது..!

இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது..!

அகத்திய சித்தர் தென்பாண்டி நாட்டில் தங்கியிருந்த சமயம் அது. பாண்டிய மன்னன் ஒருவன் அவரை வணங்க வந்தான். அவனுக்கு முதுகில் கூன் இருந்தது. தனது பரம்பரையே இப்படி கூன் விழுவதாக அவன் அகத்தியரிடம் சொல்லி வருத்தப்பட்டான். அகத்தியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, பிறவிக்கூனை குணப்படுத்த தன்னிடம் மூலிகைகள் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து ஆஸ்ரமத்திற்கு வரும்படியும் சொல்லி அனுப்பினார்.மன்னன் நம்பிக்கையுடன் சென்றான். 

தேரையரை அழைத்த அகத்தியர், சீடனே! கூனை நிமிர்த்தும் மூலிகை வகைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேள். அவற்றை காட்டிற்குள் சென்று பறித்து வா, எனச்சொல்லி, மூலிகைகளின் அடையாளம் மற்றும் குணத்தையும் எடுத்துச் சொன்னார். தேரையரும், அகத்தியர் கூறியபடியே அவற்றை அடையாளம் கண்டு ஒரு பை நிறைய பறித்து வந்து விட்டார். அகத்தியர் அந்த மூலிகைகளைச் சாறெடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். தேரையரிடம், தேரையா! நீ இந்தக் கரைசல் பக்குவமாக வரும் வரை கிளறிக்கொண்டிரு. எனக்கு காட்டிற்குள் சிறிது வேலையிருக் கிறது. நான் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளலாம், என சொல்லிவிட்டு சென்று விட்டார். தேரையரும் பக்குவமாக காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு மேலுள்ள மேற்கூரையில் இருந்து டக் என சப்தம் வந்தது. இது கேட்டு நிமிர்ந்தார் தேரையர். என்ன ஆச்சரியம்! வளைந்திருந்த அந்த மூங்கில் நிமிர்ந்து நேராகி இருந்தது. தேரையரின் மூளையில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது. குரு என்னவோ, தான் வந்த பிறகு கரைசலை இறக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லியிருக்கிறார்.

ஒருவேளை அவர் வர தாமதமானால், கரைசல் மேலும் சூடாகி, இந்த அற்புதமான மருத்துவக் குணத்தை இழந்து போகலாம். மூலிகையின் புகைபட்டே வளைந்த மூங்கில் நிமிர்கிறது என்றால், மூலிகை கரைசலைத் தடவினால் கூன் நிச்சயமாக குணமாகத்தானே செய்யும்! இது தான் சரியான பக்குவம். கரைசலை இறக்கி வைத்து விட வேண்டியது தான், என நினைத்தவர், அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டார். களைப்பாக இருந்ததால், சற்று படுத்திருந்தார். வெளியே சென்றிருந்த அகத்தியர் வந்தார். 

அடேய்! உன்னை நம்பி எவ்வளவு முக்கியமான பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் போனேன். நீ என்னடாவென்றால், உறங்கிக் கொண்டிருக்கிறாயே! மூலிகை குழம்பு என்னாயிற்றோ! என்று கோபமாகப் பேசியவரிடம், மிகுந்த பணிவுடன் சென்ற தேரையர், நடந்ததைச் சொன்னார்.அகத்தியர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். சீடனே! எனக்கு கிடைத்தவர்களில் நீ மிகவும் உயர்ந்தவன். ஒவ்வொரு ஆசிரியருக்கும் இப்படி புத்திசாலி மாணவர்கள் கிடைக்கவும் கூட கொடுத்து வைக்க வேண்டும்! அன்றொரு நாள் ஒரு உயிரைக் காப்பாற்ற மூளையில் இருந்த தேரையையே குதிக்கச் செய்தாய்.இன்று, கூன் நிமிரும் பக்குவத்திற்கு கரைசலை தயார் செய்துள்ளாய். பெரியவர்கள் சொன்னதைக் கேட்க வேண்டும் தான்! அதே நேரம், சமயத்திற்கு தக்க முடிவுகளையும் எடுப்பதன் மூலம் அவர்களின் அபிமானத்தை மேலும் பெறலாம். மகனே! இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது. வெளியே செல், என்றார். தேரையர் அதிர்ச்சியானார். நல்லதைச் செய்ததாகச் சொல்லிவிட்டு, இப்போது வெளியே போகச் சொல்கிறாரே! என குழம்பி நின்றார்.ஒருவேளை நாம் செய்தது முட்டாள்தனமோ.. குரு நம்மைப் புகழ்வது போல பழிக்கிறாரோ, என கலங்கி நின்றார்.

குருதேவா! நான் ஏதும் தவறு செய்து விட்டேனா? தாங்கள் என்னை வெளியே போகச் சொல்லுமளவுக்கு நான் தங்கள் கவுரவத்துக்கு பங்கம் இழைத்து விட்டேனா? அவ்வாறு செய்திருந்தால், நான் உயிர் தரிக்க மாட்டேன்... தேரையர் கிட்டத் தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்.அடடா... தவறாகப் புரிந்து கொண்டாயே! திறமையுள்ள இருவர் ஒரே இடத்தில் இருப்பதால் மக்களுக்கு லாபம் குறைகிறது. அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தால் பயன்பெறும் மக்களின் அளவு கூடும். நீ தனித்தே வைத்தியம் செய் என்று அனுப்பிவைத்தார்.

வாழ்வின் ரகசியம் !!!

வாழ்வின் ரகசியம் !!!

"வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன் . ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

நான் என்ன செய்யட்டும்?" என்றான் குருவிடம் சீடன்.

"தம்பி- நீ வாழ்க்கையில் என்னவாக இருக்க விரும்புகிறாய் ? எருமையாகவா,கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.

"புரியல குருவே.." என்றான்.

"எருமை பின்னால் தட்டினால், எதையும் கண்டு கொள்ளாது. கழுதை, தட்டியவரை எட்டி உதைக்கும். ஆனால் குதிரை முன்னால் பாய்ந்து செல்லும்.

புரிந்ததா...நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இது தான் வாழ்வின் ரகசியம் என்றார்.

எனக்கு டிக்கெட் வேண்டாம்

.“ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார். தினமும் அவருக்கு ஒரே ரூட் தான். ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது. நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. ஒரு நிறுத்தத்தில் முரட்டுத்தனமான மனிதன் ஒருவன் ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய் இருந்தவனைப் பார்த்த எல்லோரு க்குமே கொஞ்சம் அச்சமாய்தான் இருந்தது. கண்டக்டர் அவனிடம் சென்று, “டிக்கெட்’ என்று கேட்டார். அவன் உடனே, “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று சொல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டான். “ஏன் டிக்கெட் வேண்டாம்’ என்று கேட்க கண்டக்டருக்குப் பயம். தள்ளி வந்து விட்டார்.

மறுநாளும் இதே கதை. “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று முறைத்தக் கொண்டோ சொல்லக் கண்டக்டர் வந்து விட்டார். இப்படியே ஒரு வாரம் கழிந்தது. கண்டக்டருக்கு எரிச்சல் அதிகரித்தக் கொண்டே இருந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார்.

அவன் பலசாலியாக இருப்பதால்தானே பயமாக இருக்கிறது, நாமும் பலசாலியாவோம் என்று எண்ணி உடற்பயிற்சிகள் செய்யத் துவங்கினார். தற்காப்பு கலை வகுப்புகளுக்குப் போனார். ஆறு மாதங்கள் இப்படியே போனது. கண்டக்டரின் உடல் வலுவானது. பயம் கொஞ்சம் போனது. இன்று அந்த தடியனிடம் டிக்கெட் ஏன் எடுப்பதில்லை என்று கேட்டுவிட வேண்டும் என்று பஸ்ஸில் ஏறினார்.

இரண்டு ஸ்டாப்புகள் கழித்து அவன் ஏறினான். கண்டக்டர் டிக்கெட் கேட்க அவன் வழக்கம் போல், “நான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை’ என்று சொல்லி தலையைத் திருப்பிக் கொண்டான். கண்டக்டர் தன் தைரியத்தையெல்லாம் வர வழைத்துக் கொண்டு “ஏன் தேவையில்லை?’ என்று விறைப்பாய் கேட்டார். அதற்கு அவன் சொன்ன பதில், “நான் பஸ் பாஸ் வைத்திருக்கிறேன்’.’

ஒரு பழமொழி:

பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!

Wednesday, December 4, 2013

கொழுப்பை குறைக்க..!


பூண்டு: ‘பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. 5-8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில்  கெட்ட கொழுப்பு  கணிசமாக குறைந்துவிடும்.
ஆப்பிள்-வாழைத்தண்டு-கீரை: பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளை கூட்டு வைத்து சாப்பிடலாம்.
கொள்ளு: ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.
கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
கறிவேப்பிலை:கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.
மிளகு:வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும்.  உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.
சாம்பார் வெங்காயம்:சின்ன வெங்காயம் ஐந்து எடுத்து, நல்லெண்ணெயில் வதக்கி, வெந்ததும் மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
கோடாம்புளி: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோடாம்புளி என்கிற புளியை நாம் வழக்கமாக பயன்படுத்தும் புளிக்கு பதிலாக  பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
சீரகம் – அதிமதுரம்:தித்திப்பு குச்சி என்று அழைக்கப்படுகிற அதிமதுரம் மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து நன்றாக இடிக்கவும். இதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.  அது ஒரு பங்காக சுண்டியவுடன் வடிகட்டி காலை, மாலை என இருவேளைகளில் தேநீருக்கு பதிலாக அருந்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீருடன்      20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது. கேரள மக்கள் அன்றாடம் பருகுவதும் சீரக தண்ணீரைத்தான்.
செம்பருத்தி,ரோஜா இதழ்கள்: செம்பருத்தி பூ இதழ்களை சிறிது எடுத்து உலர்த்தி, 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து        50 மில்லியாக சுண்டியதும் இறக்கி பருகவும். இதேபோல் ரோஜா இதழ்களையும் பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி – ஏலக்காய்: இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.
சோற்றுக் கற்றாழை: சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து ஏழு முறை கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்!


பொடுதலை கீரை



பொடுதலை கீரையின் மருத்துவ பயன்கள்:- 


கிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பெரும்பாலானோர் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது தென்னிந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது.

இது வெப்பத் தன்மை கொண்டது.

இதனை பூற்சாதம், பொடுதலை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

ஒற்றைத் தலைவலி நீங்க

தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் தலைவலிதான் முதலில் உருவாகும். இதில் மன அழுத்தம் உருவானால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். இந்த தலைவலி பல வகையில் அல்லல்படுத்தும்.

இவர்கள் பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.

இருமலை தடுக்க

இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

நீரிழிவு நோயின் தாக்கம் குறைய

நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும்.

அக்கிப் புண்ணை குணப்படுத்த

உடல் சூட்டால் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக உருவாகும். இதனை அக்கி என்பர். இது உடலில் அதிக எரிச்சலை உண்டாக்கும். பாதிக்கப்பட்டவர்கள், பொடுதலையை நன்கு மைபோல் அரைத்து அக்கியின் கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள் விரைவில் ஆறும்.

வயிற்று உபாதைகள் நீங்க

பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை என இருவேளையும் கஷாயம் செய்து இரண்டு நாட்களுக்கு அருந்தி வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.

வெள்ளை படுதலை குணப்படுத்த

பெண்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோயில் வெள்ளைப்படுதலும் ஒன்று. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

பொடுகு நீங்க

இக்காலத்தில் ஆண், பெண் பாரபட்சமின்றி பொடுகுத் தொல்லையால்
பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும். அல்லது தேங்காய் எண்ணெயில் பொடுதலை இலைகளை போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

விரை வீக்கம் குறைய

சிலருக்கு வாயுவினாலோ அல்லது ஏதேனும் அடிபட்டாலோ விரைப்பையில் வீக்கம் உண்டாகும். இவர்கள் பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான பகுதியில் பற்று போட்டால் விரைவீக்கம் குறையும்.

கருப்பை வலுப்பெற

சில பெண்களுக்கு கருப்பை வலுவில்லாமல் இருப்பதால் கருச்சிதைவு உண்டாகும்.இவர்கள் பொடுதலையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கருப்பை வலுப்பெறும்.

கை கால் வீக்கம் குணமாக

கை, கால் கணுக்களில் வீக்கம் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து வீக்கமுள்ள பகுதியில் பூசி வந்தால் கை கால் வீக்கம் குறையும்.

பலவித நோய்களையும் போக்கும் பொடுதலையை அடிக்கடி உண்ணாமல் மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ அளவோடு சேர்த்துக்கொள்வது நல்லது.

தோல் நோய்கள் அனைத்திற்கும் பொடுதலை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தலையிலுள்ள பொடுகையும் நீக்கும். இச்செடியின் வேர், காய், பூ அனைத்துமே மருத்துவக் குணம் உடையது, எனவே இச்செடியை வேர், பூ, காயோடு பிடுங்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு நீர் விட்டு நன்றாக இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து, அதிக நெருப்பில்லாமல் நன்றாகக் காய்ச்சி வாரம் இருமுறை தலையிர் நன்றாக அழுத்தித் தேய்த்து குளிக்க தலை மற்றும் உடல் தொடர்பான தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

Sunday, December 1, 2013

சப்போட்டா பழம்


உடலுக்கு ஆற்றலை தரும் சப்போட்டா பழம்

கண்களுக்கு நல்லது: சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ வை கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால் தினமும் ஒரு சப்போட்டா பழம் எடுத்துக்கொள்ளலாம்..

இதய பாதுகாப்பு: இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்றபடி பாதுகாக்கும் தன்மையை சப்போட்டா பழம் கொண்டுள்ளது என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்.

ஆற்றலை வழங்கக்கூடியது: நாம் சுறுசுறுப்பாக நடந்து செல்ல நமக்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆற்றல். அந்த ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது சப்போட்டா பழம் . ஏனெனில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ்சை கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ஆற்றல் அதிகம் தேவைப்படும் அதனால் அவர்களுக்கு சப்போட்டா பழம் பரிந்துரைக்கப்படுகிறது.

புற்றுநோய் தடுப்பு: வைட்டமின் ஏ மற்றும் பி யை கொண்டுள்ளதால் உடலில் ஏற்படக்கூடிய சளி, தோளின் அமைப்பு முறை, போன்றவற்றை ஆரோக்கியமாக பராமரிக்கிறது. சப்போட்டாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள், நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது வாய் குழி புற்றுநோய், பெருங்குடல் சளி சவ்வை நச்சுகளிடமிருந்து பாதுகாக்க வைட்டமின் ஏ வை கொண்டு பாதுகாப்பு வழங்குகிறது.

எலும்பை உறுதிப்படுத்தும்: எலும்பை பலப்படுத்த தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இருப்பு சத்துகளை அதிகளவு கொண்டுள்ள சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் எலும்பை பலப்படுத்தலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பின் வளர்ச்சியை மேம்படுத்தி எலும்புக்கு வலு சேர்க்கிறது.

மலச்சிக்கலுக்கு நிவாரணம்: சப்போட்டா சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. சப்போட்டா மூலமாக நார்ச்சத்துகளை நமது உடலுக்கு 5.6/100g அளவு வழங்குகிறது. இதனால் மலச்சிக்கள் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சப்போட்டா பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

பித்தம் நீக்க: சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து. சப்போட்டா பழத்தை கூழாக்கி, சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்து போட்டு சாப்பிடலாம். இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.