Wednesday, September 17, 2014

இருமலுக்கு இயற்கை வைத்தியம்:

கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.

தொடர்ச்சியான இருமல்:

இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.

சிற்றிருமல்:

நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.

இரைப்பு இருமலுக்கு:

இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.

கோழை இருமல்:

நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.

வறட்டு இருமல்:

வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.

உடல் சூட்டினால் இருமல்:

உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.

எந்த வகையான இருமலுக்கும்:

பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.

கக்குவான் இருமலுக்கு:

கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

ஜலதோஷம் காரணமாக இருமல்:

ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.
இடுப்பு-கை-கால்-தலை வலிகளைப் போக்க எளிய வழி (அக்குபிரஷர்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
கல்லீரல், பித்தப்பை போன்ற உறுப்புக்களில் உண்டாகும் பாதிப்பு, சிறுநீரகத்தின்( Kidney) செயல்பாட்டில் பிரதிபலிக்கும். 
இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாகவோ (அ) குறைந்தோ காணப்பட்டு, எலும்புகள்(bones), எலும்பு மஜ்ஜை (bone marrow), எலும்புகளைப் இணைக்கும் தசைநார்கள் (ligaments), தசை நாண்கள் (tendons), தசைகள் (muscles) இவ்வுறுப்புகளில் சில பாதிப்புகளை உண்டாக்கும்.

இந்த உறுப்புகளில் உண்டாகும் பாதிப்பை நமது உடல், இடுப்புவலி, நரம்புகள் பிடிப்பு, சுளுக்கு, கழுத்து சுளுக்கு, தலைவலி, மயக்க உணர்வு, கை, கால் மரத்துப் போதல், காதிரைச்சல் (tinnitus) போன்ற வலிகள் மூலம் வெளிப்படுத்தும்.

கல்லீரல் - பித்தப்பை, சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளில் உண்டான தடைப்பட்ட இயக்கத்தை சீராக்கவும், அந்த உறுப்புகள் வெளிப்படுத்திய நோயின் அறிகுறிகளைப் போக்க அக்குபிரஷர் முறையில் எளிய வழி உள்ளது..

கணுக்கால் முட்டியின் மேற்புறம் (படத்தில் காட்டியுள்ளது போல) ஒரு நிமிடம் நன்கு அழுத்திப் பிடித்துக் கொண்டு நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும். பின் மெதுவாக அழுத்தம் கொடுப்பதை நிறுத்தி விட்டு ஒரு நிமிடம் அந்த இடத்தில் கட்டை விரலால் தடவி விட வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் நமது உடல் வெளிப்படுத்திய அறிகுறிகள் (வலிகள்) கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நமது உடல் புத்துணர்ச்சி பெறுவதை நன்கு உணரலாம்...ஒரு நாளில் வலியைப் பொறுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.

இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்

117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.
13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.
18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.
19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.
23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.
24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.
25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.
26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.
29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.
30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.
31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.
32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.
37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.
38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.
41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.
42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.
44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.
46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.
51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.
67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்துவேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்துபாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.
79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.
80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.
81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.
82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.
83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.
86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.
88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.
90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவரகண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.
91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.
92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.
95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர,நரம்பு தளர்ச்சி நீங்கும்.
96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.
97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.
98)நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
99)தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
100)தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
101)தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
102)வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
103)உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
104)அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
105)குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
106)வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
107)வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
108)மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
109)சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
110)பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
111)மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
112)சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
113)தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
114)மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
115)தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
116)மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
117)வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாக

Monday, September 1, 2014

கவலை

கவலை
* * * * * * * 
ஒரு பொருளின் மீது மற்றொரு பொருள் ஏற்படுத்தும் தாக்கம் மனஇறுக்கம், மனபாரம், மனஅழுத்தம் என பல நிலைகளை கடந்து கவலையாக முழு பரிமாணத்தை அடைகிறது. உறுதியின்மையும், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் போது அதை பற்றியே சிந்தித்து சிந்தித்து நமக்கு நாமே அடையும் மன உளைச்சலின் போது நமக்குள் தோன்றும் ஒருவகை உணர்ச்சி தான் கவலை.

வேலையை செய்து முடிப்பதில் தாமதம், போக்கு வரத்து நெரிச்சல், தேர்வுகள், பதவி உயர்வு பற்றிய சிந்தனை , போட்டி, பொறமை முதலான மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும்போது கவலை தானே தோன்றி விடுகிறது. கவலைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. சிலர் எப்போதும் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தைப் பற்றியும், வேறு சிலர் மற்றவர்களைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
கவலைகளில் இரண்டு வகை உண்டு.
1.சுயநலமான கவலை
2.பொதுநலமான கவலை.
மற்றவர்களைப் போல தனக்கும் வாழ்க்கை அமையவில்லையே என்ற கவலை. நாளை நம் நிலை என்னவாகுமோ என்ற கவலை.
இப்படியே கவலை நம் மனத்தையும், உடலையும் ஆக்கரமித்து எப்படியெல்லாம் நம் உடலைப் பாதிக்கும் என்பதை இனி பார்ப்போம்.
கவலையால் அதிகம் பாதிப்பை தோல் தான் சந்திக்கிறது. தோல் வியாதிகளை அதிகமாகவும், குணமாகாமலும் இருக்க காரணம் இந்த ஸ்ட்ரெஸ் எனும் கவலை தான். தோலில் மட்டுமே ஸ்கின் ரேஷேஸ் எனப்படும் சிவப்பு திட்டுகள், கொப்புளங்கள், வெடிப்புகள், சொரியாசிஸ், எக்சிமா என்று பலவிதத்தில் வெளிப்படும்.
மேலும் வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள், மனக்கவலை, மன உளைச்சல், கவனச்சிதறல், அமைதியின்மை, முன்கோபம், சிறிய சத்தம் கேட்டால் கூட எரிச்சல் அடைவது, தலைசுற்றல், தலைவலி, அசதி, இதயம் வேகமாக துடித்தல், மூச்சுத் திணறல், அதிக இரத்தஅழுத்தம், இதய நோய்கள், நெஞ்செரிச்சல், அதிகப்படியான கொழுப்பு சேருதல், பெப்டிக் அல்சர், உணவு ஒவ்வாமை, வாந்தி, திடீரென எடை குறைதல்/கூடுதல், இன்சுலின் சுரப்பதில் கோளாறு, நீரிழிவு, உடல் எதிர்ப்பு சக்தி இழத்தல், உடம்பில் எந்த இடத்திலும் திடீரென உண்டாகும் எரிச்சல், வெடிப்பு, தசை வலி, அஜீரணம், பக்கவாதம், வலிப்பு, உடல் நடுக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பேதி, மூட்டுகளில் வலி, மூட்டுகளில் அழற்சி, தோள்பட்டைகளில் வலி, கை, கால்கள் மரத்துபோதல், இடுப்பு வலி, உடலுறவில் ஈடுபாடின்மை, குழந்தையின்மை, தூக்கமின்மை, கனவுத்தொல்லை இதோடு இல்லாமல் இன்னும் தொடரும் நோய்கள் எண்ணிக்கை அதிகம் தானே ஒழிய குறைவில்லை.
வாழும் காலத்தில் நல்ல சிந்தனைகள், எண்ணங்கள், பொறமை, புறம்பேசுதல், ஏமாற்றுதல் அனைத்தையும் விட்டொழித்தால், கவலையே நம்மைப் பார்த்து குமுறி கவலையுறும்.
எந்த ஒரு விஷயமும் நிலையில்லை. நிரந்தரமுமில்லை. சந்தோஷம், துக்கம் இரண்டுமே வந்த விதத்தில் நம்மை விட்டு அகலும். பிறந்தவர்கள் இறந்து தான் ஆக வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் நிலையாக இருந்தால் கவலை நம்மை விட்டு விலகியோடும். இந்நிலையில் கவலையை நாம் ஏன் விடாமல் சுமக்க வேண்டும். இனி சுமப்பதா, இல்லை தூக்கி வீசுவதா என்ற முடிவு இனி உங்கள் கைகளில்!
சந்தோஷமும், துக்கமும் சாமியாரிடமும், டாக்டரிடமும் இல்லை. எல்லாமே நமக்குள்ளே, நம் காலடியில் கொட்டிக் கிடக்கின்றன. வேறெங்குமில்லை நமக்குள்ளே தேடினாலே போதும்.
தீர்வு: பிராணயாமம், சுவாசப் பயிற்சி, தியானம், கற்பனைகள், நல்ல புத்தகங்கள், எளிய உடற்பயிற்சி, நேர்மறையான எண்ணங்கள் மட்டுமே.

Wednesday, August 27, 2014

"தோப்புக்கரணம்" - இது தண்டனை அல்ல... சிகிச்சை.

"தோப்புக்கரணம்" - இது தண்டனை அல்ல... சிகிச்சை..!!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"வீட்டுப்பாடம் செய்யாதவங்க எல்லாம் தோப்புக்கரணம் போடு.." என்று பள்ளியில் ஆசிரியர் சொல்வதை கேட்டிருக்கிறோம்... பிள்ளையார் கோயில்களில் வழிபாட்டிற்காக தோப்புக்கரணம் போடுபவர்களை பார்த்திருக்கிறோம்.. இவைகள் எல்லாம் சில பல வருடங்களுக்கு முன்பு மிகச் சாதாரணமாய் நடக்கும்நிகழ்வுகள்... ஆனால் இப்போது தோப்புக்கரணம் போடுவதை அதிகமாகக் காணமுடிவதில்லை. அந்தப்பழக்கம் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.

ஆனால் தண்டனையாகவோ, பிரார்த்தனையாகவோ நம் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த "தோப்புக்கரணம்" போடும் பழக்கம் ஒரு மிகப்பெரிய "அக்குபஞ்சர்" சிகிச்சை முறை என்பதும்.. அது உடலின் பல உறுப்புகளை தூண்டும் முறை என்பதும் நமக்குத் தெரியாதது. தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக் கொள்வதால். முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.

இரு கால்களுக்கும் சற்று இடைவெளி விட்டு நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்காந்து எழுவதே தோப்புக்கரணம் ஆகும். இடது கையால் வலது காதுமடலையும், வலது கையால் இடது காதுமடலையும் பிடிக்க வேண்டும். கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்குமாறு இருவிரலால் பிடிக்க வேண்டும். (வலது கை இடது கையின் மேல் இருக்க வேண்டும்.) முதுகுதண்டு நேராக இருக்கும்படியும், தலையை நேராய் பார்த்த படியே முச்சுக் காற்றை மெதுவாகவும் சீராகவும் விட்ட படியே உட்கார்ந்து எழ வேண்டும். அதிக சிரமப்படாமல் முடிந்த அளவு உட்கார்ந்து முச்சை இழுத்துக்கொண்டே பொறுமையாக எழவேண்டும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது. மூளையின் இரு பகுதிகளும் பலன் அடைகின்றன.இதனால் மூளையின் நரம்பு மண்டலங்களின் வழியாக சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன.

தோப்புக்கரணத்தின் மகிமையை ஆராய்ந்த அமெரிக்கர்கள் நிபுணர்கள், இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்களும், மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெற்று நியூரான்களும் புத்துணர்ச்சி அடைந்து, மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளைப் பெற்று மூளையின் நியூரான்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதை நிரூபித்துள்ளனர்..

விநாயகர்வழிபாட்டில் தோப்புக்கரணம் இடம்பெறுவது முழு உடல்நலத்திற்கும் உகந்தது என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. (அமெரிக்காகாரன் சொன்னாதான் நம்ம ஊருக்காரங்க நம்புவாங்க)

"ஆட்டிசம்"போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தோப்புக்கரணத்தை தினமும் பயிற்சி செய்து வந்தால் வியக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம் என்று அமெரிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

மூட்டுவலிக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக உடலில் உப்புச் சத்து குறைந்தாலும், அதிகமானாலும் சவ்வு பாதிக்கப்பட்டு மூட்டுவலி ஏற்படும். மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள் பாதிப்பால் மூட்டுவலி உண்டாகிறது. சிறுநீரகம் செயல்பாடு குறைவும் ஒரு காரணம். தேவைக்கதிகமான கொழுப்புச்சத்த மற்றும் அதிகபடியான நீர் சேர்வதாலும், உடல் எடை அதிகரிக்கும். பால்வினை நோயாலும் மூட்டுவலி ஏற்படும். கருப்பை அகற்றிய பெண்களுக்கும் எலும்பு தேய்ந்து மூட்டுவலி வர வாய்ப்புள்ளது.

தரையில் சமமாக கால் பதிக்கக் கூட சிலரால் முடியாது. அப்படியே காலை வைத்தாலும் அதில் ஒரு பிடிமானம் இல்லாமல் ஆடுவது போன்ற உணர்வு இருக்கும். வலி அதிகமானப் பிறகு யோகா, தியானம் என சில பயற்சிகளை செய்யத்தொடங்குவார்கள்... ஆனால் அப்படியும் கூட வலி குறையாமல் அதிகமானதாக சிலர் கூறுவார்கள்.

பெரியவர்கள் மூட்டுவலி என்று கூறும் காலம் போய் இப்போது இளவயதினர் கூட கூறும் வார்த்தை இது தான். அதிக எடை மற்றும் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து வேலை செய்தல், உடல் உழைப்பும், உடலற் பயிற்சியுமின்மையும் இதற்கு காரணம்.
ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகளும் தைலம் தேய்ப்பது, ஒத்தடம் போடுவது தற்காலிகத் தீர்வையே தரும்.

எளிய தோப்புக்கரணத்தின் பலன்களோ மிகவும் அற்புதமானவை. தரையில் அமர்ந்து எழுந்திருப்பதால், நம் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடும். தரையில் உட்கார்ந்து எழும்போது இரத்த ஓட்டம் இதயத்தில் சீராக இருப்பதால், இதயம்ஆரோக்கியமாக இருக்கும். நம் உடலின் ஒவ்வொரு பாகமும் பலனடைகிறது. குறிப்பாக, தரையில் அமர்வதால், முழங்கால் மூட்டுக்களும், இடுப்பெலும்புகளும் வலுவடைகின்றன. அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பதால், இவை மிகவும் இலகுத் தன்மை அடைந்து நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது. முழு ஆரோக்கியம் நம் உடலுக்கு வேகமாக கிடைக்க இதை விட்டால் வேற வழியே இல்லை எனலாம். இதை உங்கள் வாழ்நாள் முழுதும் பூரண ஆரோக்கியத்துடன் வாழலாம்.

இதனால் காலில் உள்ள தசைகள் வலுப்பெறுவதுடன் உடலில் உள்ள தசைகளும் சேர்ந்தே வலுவடையும். உடலின் மொத்த உறுப்புகளும் மிகுந்த பயன் அடையும். இந்த எளிய பயிற்சி மூலம் நம் உடல் மேற்புறமும், கீழ்புறமும் சமமாக வலுவடையும். இயல்பாக எந்த வேலை செய்தாலும் தசைகளை சமநிலைப் படுத்தி வலுவுடனும் மிகவும் இலகுவாக வலியற்று நகரும் தன்மையுடன் செயல்பட வைக்கிறது. உடல் எடையை குறைந்து மூட்டுவலி இருந்த இடம் தெரியாமல் போகும். வயிற்றுத் தசைகளை வலிமைப்படுத்தும். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களும், சியாட்டிகா என்றழைக்கப்படும் இடுப்புச் சந்து வாதம் உள்ளவர்களுக்கும் இந்த தோப்புக்கரணம் நல்ல பயனளிக்கும். இடுப்பு மற்றும் மூட்டுகளுக்கு வலுவடைந்து தசைப்பிடிப்பு, மூட்டுவலி, முடக்குவாதம் போன்றவை நம்மை விட்டொழியும். முக்கியமாக உடலில் தேங்கியுள்ள கழிவுகள் முழுமையாக வெளியற்றப்படுகிறது , உடலில் உள்ள சக்தி சீராக தசை, உள்ளுறுப்புகள், மற்றும் சுரப்பிகளுக்கு அனுப்பபடுகிறது. இதனால் பெருங்குடல் வலுவடைந்து, சீரான அசைவுகளின் மூலம் மலத்தை வெளியேற்றுகிறது. மலச்சிக்கல் தீர்வதற்கு இது மிகச் சிறந்த வழியாகும்.

இந்த பயிற்சியை நாம் எங்கு வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம். ஜிம்க்கு போகவும் வேண்டாம். வேறு எந்த உபகரணமும் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆரம்ப காலகட்டங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை 15-20 முறை தோப்புக்கரணம் போடலாம் (அ) படத்தில் கூறியுள்ளது போல உட்கார்ந்தும் எழலாம். வயதானவர்கள் தன்னிச்சையாக நின்ற நிலையில் தோப்புகரணம் போட முடியாது ஆகவே அவர்கள் ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டோ, நட்டுவைக்கப்பட்ட இரும்பு, மரத்தூண்களை பிடித்துக்கொண்டோ உட்கார்ந்து எழுந்திருக்கலாம்.

தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதும், மலத்தை அடக்குவதும் அறவே கூடாது. காபி, டீ குடிப்பதை நிறுத்த வேண்டும். சீரணமாக அதிக நேரம் எடுக்கும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வாழ்க்கை முறையிலும், உணவு பழக்கத்திலும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டு

Monday, August 25, 2014

முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்

முடக்கறுத்தான் !!!
முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்
முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்
முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம் ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum , ஆகும்.
இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். ஆம். இது மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம். இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி , கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட நோயும் நம்மை அணுகாது என்பது நிச்சியம்.
"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-
கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.
முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.
இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.
இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.
இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:
ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.
முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.
குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.
சுகப்பிரசவம் ஆக:
முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.
மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக:
மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.
முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை:
ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.
பாரிச வாய்வு குணமாக -: கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.
சுக பேதிக்கு :
ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.
முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.
முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.
சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.
முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.
முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.
முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.

Thursday, August 21, 2014

பயறு வகை

டலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. புரதச் சத்து மிகுதியாக இருப்பதால், பயறு வகைகள் அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன. 
பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முந்தைய நிலையிலும் சாப்பிட ஏற்றவை தான். ஆனாலும், நன்றாக முதிர்ந்தப் பயறு வகைகளில்தான் குறைவான ஈரப்பதமும் அதிகச் சத்துக்களும் இருக்கும். முளைவிட்டப் பயறு வகைகளில் அதிக அளவு நீர்ச் சத்தும், வைட்டமின் சத்துக்களும் இருப்பதால் பூஞ்சைக் காளான் வளர ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும்.
குழந்தைகள் முதல் டீன் ஏஜ் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள் என அனைவருக் கும் பயறு வகைகள்  அவசியம் தேவை. அதே சமயம், அதிகமாகச் சாப்பிடுவது நல்லது அல்ல. சைவ உணவு சாப்பிடுபவர்கள், தினமும் ஏதேனும் ஒரு வகை பயறை 50 கிராம் எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பயறுகளைச் சுண்டலாக சமைத்துச் சாப்பிடுவது நல்லது!'' என்கிறார் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.
எச்சரிக்கை: ஜீரண சக்திக் குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்டப் பிரச்னை, சிறுநீரகப் பாதிப்புக் கொண்டவர்கள் சில பயறு வகைகளை குறைவான அளவில் சாப்பிடுவதே நல்லது.
முளைக்கட்டியப் பயறு வகைகளில் 'யூரிக் ஆசிட்’ அதிகம் இருப்பதால், மூட்டு வலி (Gout Disease) வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். முளைக்கட்டியப் பயறை வெந் நீரில் மிதமாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். இதில், நார்ச் சத்து அதிக அளவில் இருப்பதால், சாப்பிட்டதும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பச்சைப் பயறு
எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது பச்சைப் பயறு. மலச் சிக்கலைப் போக்கும். இதில், புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாஷியம், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மாவுச் சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். பொட்டாஷியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
கொண்டைக்கடலை
ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். வயிற்றில் வரும் புற்றுநோயான இன்டெஸ்டினல் கேன்சர் (Intestinal cancer)  போன்ற நோய்களைத் தடுக்க வல்லது. இதில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. கொழுப்பு ஓரளவும் கோலின், பீட்டா கரோட்டின் ஆகியவை சிறிதளவும் இருக்கின்றன. வெள்ளை நிறக் கொண்டைக் கடலையைக் காட்டிலும் சிறிய அளவிலானக் கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச் சத்து இருக்கிறது. முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் இருக்கும் ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
மொச்சைப் பயறு
சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; இதில், புரதம், மாவுச் சத்து, கோலின், பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. சிலருக்கு மொச்சை சாப்பிட்டால், வாயுப் பிரச்னை ஏற்படும். அவர்கள் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், வளரும் குழந்தைகள் ஆகியோர் தினமும் சாப்பிடலாம்.  
காராமணி
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு. வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும். தென் மாவட்ட மக்கள் இதைத் தட்டைப் பயறு என்று அழைப்பார்கள். இதில் பொட்டாசியம் மிகவும் அதிகமாக இருக்கிறது. புரதம், கலோரி, மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், ஃபோலிக் ஆசிட், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
 கொள்ளு
எலும்புக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்; தசைகள் வலுப் பெறும். உடலில் உள்ள கொழுப்பை அகற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில், புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றன. ஆக்ஸாலிக் ஆசிட் இருப்பதால், அதிகம் சாப்பிடக் கூடாது. அவ்வப்போது, கொள்ளு ரசம் வைத்துச் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம். மற்றபடி எல்லோருக்கும் ஏற்றது. புரதச் சத்து அதிகம் இருப்பதால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
ராஜ்மா
தசைகளை நன்றாக இறுகச்செய்வதோடு, மலச் சிக்கலையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் உண்டு. மெக்னீஷியம், துத்தநாகம், தாமிரம், நார்ச் சத்து ஓரளவு இருக்கின்றன. சோடியம், பொட்டாஷியம் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. உடலை வருத்தி உடற்பயிற்சி செய்பவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள் அனைவரும் சாப்பிட ஏற்றது.
பட்டாணி
காய்ந்த பட்டாணியில் புரதம், மாவுச் சத்து, கலோரி மற்றும் தாது உப்புக்களான இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து ஓரளவு இருக்கிறது. பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. பொட்டாஷியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். பச்சைப் பட்டாணித் தோலில் கால்சியம், இரும்புச் சத்து அதிகமாக உள்ளன. புரதம், மாவுச் சத்து, கலோரி, வைட்டமின் - சி ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்களும், ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிடலாம். குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது.
சோயா
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்; பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளைப் போக்கும்; வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோயைத் தடுக்கவல்லது; இதில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 வகை கொழுப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன. மாவுச் சத்து, தைமின், ரிபோஃபோமின், பீட்டா கரோட்டின், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பால் குடிக்காதவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். சோயா சிலருக்கு ஜீரணப் பிரச்னையை ஏற்படுத்துவதால், நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. நாள் ஒன்றுக்கு 20 கிராம் மட்டுமே சாப்பிட வேண்டும்.
துவரைப் பயறு
உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும், மலச் சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கக்கூடியது. இதில், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து, கால்சியம் பாஸ்பரஸ், பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் - சி, நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், மாவுச் சத்து, கலோரி, இரும்பு, கோலின், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. அதிகம் வேக வைக்கவேண்டியது இல்லை. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

Wednesday, August 20, 2014

உணர்வுகளை தடுக்காதிர்

தும்மல் வேகம் 

தும்மலை அடக்குவது கடினம். ஆனால் இதை அபசகுணமாக கருதி, பலர் அடக்க முயலுவார்கள். இதனால் தும்மல் மேலும் இருமடங்கு வேகத்துடன் வெளியாகும். தடைப்பட்டால் தலைவலி, கழுத்துப் பிடிப்பு, கண்வலி, முக பக்கவாதம் முதலியவை ஏற்படலாம். இந்த கோளாறுகளுக்கு மசாஜ், கழுத்து, தலை இவற்றுக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். நாராயண தைலம் போன்ற வாதத்தை போக்கும் தைலங்களை தடவி ஒத்தடம் கொடுக்கலாம். மூக்கினில் விடும் மருந்துகளை (நாசியம்) பயன்படுத்தலாம்.

ஏப்ப வேகம் 

இரைப்பையிலிருந்து அழுத்தத்துடன் காற்று மேல் வழியாக "ஏப்பமாக" வெளியேறுகிறது. ஏப்பம் பசியுள்ள போதும், உணவு உண்டபின்னும் ஏற்படும். இரைப்பையில் இடைவெளியை ஏற்படுத்த ஏப்பம் உண்டாகிறது. பசியுடன் உள்ள போது ஏப்பம் சூடாக, எரிச்சலுடன் வெளியேறும். உணவு உண்டவுடன் வரும் ஏப்பம், உண்ட உணவிலுள்ள பதார்த்தங்களின் வாசனையுடன் வெளிவரும். ஜீரணித்த பின் ஏற்படும் ஏப்பம் சுத்தமாக மணமின்றி இருக்கும். ஏப்பம் விடுவது அநாகரிகம் என்று நாம் இதை அடக்க முயலுவது உண்டு. அதனால் விக்கல், இருமல், வயிற்று உப்புசம், மார்பில் உதறல் இவை ஏற்படலாம். மார்பில் தைலங்கள் தடவி ஒத்தடம் கொடுப்பது அஷ்டசூரணம், பாஸ்கரலவணம் இவற்றை வெந்நீருடன் கொடுப்பது - இவற்றால் ஏப்பத்தை அடக்குவதால் ஏற்படும் கோளாறுகளை சமாளிக்கலாம்.

கொட்டாவி வேகம் 

தூக்கம் வருவதின் அறிகுறி கொட்டாவி. தூக்க உணர்வு அதிகரிக்கும் போது அடுக்கடுக்காய் கொட்டாவி வரும். இதை தடுக்க முன்பட்டால், கை கால் நடுக்கம், மரத்துப்போதல், உடல் தளர்வு, மூச்சுத்திணறல், கண் வலி, தலைவலி, கழுத்தில் பிடிப்பு இவை ஏற்படலாம். இந்த கோளாறுகளுக்கு வாதத்தை குறைக்கும் ஆயுர்வேத மருந்துகள் உதவும்.

தாக வேகம்

சாப்பிடும் போது அல்லது சாப்பிட்டு முடிந்தவுடன் குடிக்க நீர் வேட்கை ஏற்படும். நீர் பருகாமல் இருந்தால் தொண்டை, வாய் உலர்ந்து போதல், உடல் வறட்சி, காதுக் கேளாமை, தலைசுற்றுதல், அதிக இதயத்துடிப்பு, உடல் களைப்பு இவை தோன்றும். குளிர்ந்த புத்துணர்ச்சியூட்டும் பானங்களை குடிக்க, இந்த கோளாறுகள் குறையும்.

பசி வேகம்

பல காரணங்களால் நாம் பசியை அடக்கிக் கொள்கிறோம். இதனால் களைப்பு, மயக்கம், உடல்வலி, தலைச்சுற்றல் ஏற்படலாம். இதைப் போக்க உடனடியாக அதிகமாக உணவை உட்கொள்ளலாமல், சூடான ருசியான உணவை அளவோடு உண்ணவும். சில சமயங்களில் மற்றவர்கள் உண்ணுவதை நேரிலே அல்லது டி.வி.யில் பார்க்கும் போது நமக்கும் 'பசி' எடுக்கும். இது இயல்பான பசி அல்ல.

கண்ணீர் வேகம்

-உணர்ச்சி வசப்படும் போது கண்ணீர் வரும். சாதாரணமாக கண்ணீர் கண்களுக்கு நல்லது. கண்ணீரை அடக்கினால், அதன் வேகம் "சைனஸ்" பாதிப்புகளை உண்டாக்கலாம். இதயநோய், கண்நோய்கள், கலக்கம், தலைசுற்றல் ஏற்படலாம். தூக்கம், அன்பான அரவணைக்கும் பேச்சு, மதுபானம் இவை கண்ணீரை அடக்குவதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்.

தூக்க வேகம்

உழைப்பிற்கு பின் உடலும், உள்ளமும் தளர்ந்து விடுகின்றன. அவற்றுக்கு ஓய்வு கொடுக்க தூக்கம் அவசியம். தூங்குவதற்கென்றே இரவு இருட்டாக அமைந்திருக்கிறது. தமோகுணம் நிறைந்த இருட்டு வேளையில் அந்த குணத்தை குறைக்க செய்வது தூக்கம். தூக்கத்தை அடக்கினால் தலைவலி, மந்தம், கண் பாதிப்புகள் ஏற்படலாம். இவற்றுக்கு மருந்து தூக்கமே ஆகும். மசாஜ்ஜும் உடல் களைப்பை நீக்கி நித்திரை வரச் செய்யும்.

பெருமூச்சு வேகம்

வெகு தூரம் நடக்கும் போதும், உடற்பயிற்சி இவற்றாலும் உடல் களைத்து, அதை சரி செய்ய பெருமூச்சு விட நேரும். இதை தடை செய்தால் மூர்ச்சை, இதயநோய், வயிற்றுவலி, கலக்கம் இவை ஏற்படலாம். ஓய்வு எடுத்துக் கொண்டால் மூச்சு விடுதல் சீராகும். வாதத்தை குறைக்கும் ஆயுர்வேத சிகிச்சைகளும் பலன் தரும்.

இருமல் வேகம்

இருமல் என்பது உடலினால் மேற்கொள்ளப் படும் ஒரு தற்காப்பு முன்னெச்சரிக்கை செயல். மூச்சுக்குழாய்களில் சுத்தம் செய்வது இருமல். வேறு வியாதிகளின் முதல் அறிகுறி இருமலாகும். எனவே இருமலை அடக்க முயன்றால், மூச்சுத்திணறல் விக்கல், உடல் உலர்ந்து போதல், மார்பில் வலி இவைகள் ஏற்படும். இருமலை போக்க சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை அடக்கக் கூடாதவைகளை பார்த்தோம். இப்போது அடக்க வேண்டிய "தாரணீய வேகங்களை" பார்ப்போம். மனவேகங்களும், உடல் வேகங்களில் எதிர்மறையானவை. உடல் வேகங்களை விட, மனவேகங்கள் அதிக பாதிப்புகளை உண்டாக்கும். ஆயுர்வேதம் பல மனவேகங் களை விவரிக்கிறது. யோசனையற்ற அவசரம், கொடுமையான வன்முறை, ஒழுக்கமில்லா செயல்கள், பேராசை, தூக்கம், பயம், கோபம், அகங்காரம், வெறுப்பு, மானமின்மை, கொடூரகுணம், பொறாமை - இவையெல்லாம் மனஉந்துதல்கள். இவற்றை அடக்க வேண்டும். சட்டியில் இருப்பது அகப்பையில் வரும் என்பார்கள்.  அதே போல உள்ளத்தில் எழும் எண்ணங்கள் கெடுதலாக இருந்தால் பேச்சும், செயல்பாடுகளும் கெட்டதாக வெளிப்படும். எனவே நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்லோர்களுடன் பழக வேண்டும். உடலையும், மனதையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் நல்ல ஆரோக்கிய வாழ்வை அடைகின்றனர்.