Wednesday, August 20, 2014

உணர்வுகளை தடுக்காதிர்

தும்மல் வேகம் 

தும்மலை அடக்குவது கடினம். ஆனால் இதை அபசகுணமாக கருதி, பலர் அடக்க முயலுவார்கள். இதனால் தும்மல் மேலும் இருமடங்கு வேகத்துடன் வெளியாகும். தடைப்பட்டால் தலைவலி, கழுத்துப் பிடிப்பு, கண்வலி, முக பக்கவாதம் முதலியவை ஏற்படலாம். இந்த கோளாறுகளுக்கு மசாஜ், கழுத்து, தலை இவற்றுக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். நாராயண தைலம் போன்ற வாதத்தை போக்கும் தைலங்களை தடவி ஒத்தடம் கொடுக்கலாம். மூக்கினில் விடும் மருந்துகளை (நாசியம்) பயன்படுத்தலாம்.

ஏப்ப வேகம் 

இரைப்பையிலிருந்து அழுத்தத்துடன் காற்று மேல் வழியாக "ஏப்பமாக" வெளியேறுகிறது. ஏப்பம் பசியுள்ள போதும், உணவு உண்டபின்னும் ஏற்படும். இரைப்பையில் இடைவெளியை ஏற்படுத்த ஏப்பம் உண்டாகிறது. பசியுடன் உள்ள போது ஏப்பம் சூடாக, எரிச்சலுடன் வெளியேறும். உணவு உண்டவுடன் வரும் ஏப்பம், உண்ட உணவிலுள்ள பதார்த்தங்களின் வாசனையுடன் வெளிவரும். ஜீரணித்த பின் ஏற்படும் ஏப்பம் சுத்தமாக மணமின்றி இருக்கும். ஏப்பம் விடுவது அநாகரிகம் என்று நாம் இதை அடக்க முயலுவது உண்டு. அதனால் விக்கல், இருமல், வயிற்று உப்புசம், மார்பில் உதறல் இவை ஏற்படலாம். மார்பில் தைலங்கள் தடவி ஒத்தடம் கொடுப்பது அஷ்டசூரணம், பாஸ்கரலவணம் இவற்றை வெந்நீருடன் கொடுப்பது - இவற்றால் ஏப்பத்தை அடக்குவதால் ஏற்படும் கோளாறுகளை சமாளிக்கலாம்.

கொட்டாவி வேகம் 

தூக்கம் வருவதின் அறிகுறி கொட்டாவி. தூக்க உணர்வு அதிகரிக்கும் போது அடுக்கடுக்காய் கொட்டாவி வரும். இதை தடுக்க முன்பட்டால், கை கால் நடுக்கம், மரத்துப்போதல், உடல் தளர்வு, மூச்சுத்திணறல், கண் வலி, தலைவலி, கழுத்தில் பிடிப்பு இவை ஏற்படலாம். இந்த கோளாறுகளுக்கு வாதத்தை குறைக்கும் ஆயுர்வேத மருந்துகள் உதவும்.

தாக வேகம்

சாப்பிடும் போது அல்லது சாப்பிட்டு முடிந்தவுடன் குடிக்க நீர் வேட்கை ஏற்படும். நீர் பருகாமல் இருந்தால் தொண்டை, வாய் உலர்ந்து போதல், உடல் வறட்சி, காதுக் கேளாமை, தலைசுற்றுதல், அதிக இதயத்துடிப்பு, உடல் களைப்பு இவை தோன்றும். குளிர்ந்த புத்துணர்ச்சியூட்டும் பானங்களை குடிக்க, இந்த கோளாறுகள் குறையும்.

பசி வேகம்

பல காரணங்களால் நாம் பசியை அடக்கிக் கொள்கிறோம். இதனால் களைப்பு, மயக்கம், உடல்வலி, தலைச்சுற்றல் ஏற்படலாம். இதைப் போக்க உடனடியாக அதிகமாக உணவை உட்கொள்ளலாமல், சூடான ருசியான உணவை அளவோடு உண்ணவும். சில சமயங்களில் மற்றவர்கள் உண்ணுவதை நேரிலே அல்லது டி.வி.யில் பார்க்கும் போது நமக்கும் 'பசி' எடுக்கும். இது இயல்பான பசி அல்ல.

கண்ணீர் வேகம்

-உணர்ச்சி வசப்படும் போது கண்ணீர் வரும். சாதாரணமாக கண்ணீர் கண்களுக்கு நல்லது. கண்ணீரை அடக்கினால், அதன் வேகம் "சைனஸ்" பாதிப்புகளை உண்டாக்கலாம். இதயநோய், கண்நோய்கள், கலக்கம், தலைசுற்றல் ஏற்படலாம். தூக்கம், அன்பான அரவணைக்கும் பேச்சு, மதுபானம் இவை கண்ணீரை அடக்குவதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்.

தூக்க வேகம்

உழைப்பிற்கு பின் உடலும், உள்ளமும் தளர்ந்து விடுகின்றன. அவற்றுக்கு ஓய்வு கொடுக்க தூக்கம் அவசியம். தூங்குவதற்கென்றே இரவு இருட்டாக அமைந்திருக்கிறது. தமோகுணம் நிறைந்த இருட்டு வேளையில் அந்த குணத்தை குறைக்க செய்வது தூக்கம். தூக்கத்தை அடக்கினால் தலைவலி, மந்தம், கண் பாதிப்புகள் ஏற்படலாம். இவற்றுக்கு மருந்து தூக்கமே ஆகும். மசாஜ்ஜும் உடல் களைப்பை நீக்கி நித்திரை வரச் செய்யும்.

பெருமூச்சு வேகம்

வெகு தூரம் நடக்கும் போதும், உடற்பயிற்சி இவற்றாலும் உடல் களைத்து, அதை சரி செய்ய பெருமூச்சு விட நேரும். இதை தடை செய்தால் மூர்ச்சை, இதயநோய், வயிற்றுவலி, கலக்கம் இவை ஏற்படலாம். ஓய்வு எடுத்துக் கொண்டால் மூச்சு விடுதல் சீராகும். வாதத்தை குறைக்கும் ஆயுர்வேத சிகிச்சைகளும் பலன் தரும்.

இருமல் வேகம்

இருமல் என்பது உடலினால் மேற்கொள்ளப் படும் ஒரு தற்காப்பு முன்னெச்சரிக்கை செயல். மூச்சுக்குழாய்களில் சுத்தம் செய்வது இருமல். வேறு வியாதிகளின் முதல் அறிகுறி இருமலாகும். எனவே இருமலை அடக்க முயன்றால், மூச்சுத்திணறல் விக்கல், உடல் உலர்ந்து போதல், மார்பில் வலி இவைகள் ஏற்படும். இருமலை போக்க சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை அடக்கக் கூடாதவைகளை பார்த்தோம். இப்போது அடக்க வேண்டிய "தாரணீய வேகங்களை" பார்ப்போம். மனவேகங்களும், உடல் வேகங்களில் எதிர்மறையானவை. உடல் வேகங்களை விட, மனவேகங்கள் அதிக பாதிப்புகளை உண்டாக்கும். ஆயுர்வேதம் பல மனவேகங் களை விவரிக்கிறது. யோசனையற்ற அவசரம், கொடுமையான வன்முறை, ஒழுக்கமில்லா செயல்கள், பேராசை, தூக்கம், பயம், கோபம், அகங்காரம், வெறுப்பு, மானமின்மை, கொடூரகுணம், பொறாமை - இவையெல்லாம் மனஉந்துதல்கள். இவற்றை அடக்க வேண்டும். சட்டியில் இருப்பது அகப்பையில் வரும் என்பார்கள்.  அதே போல உள்ளத்தில் எழும் எண்ணங்கள் கெடுதலாக இருந்தால் பேச்சும், செயல்பாடுகளும் கெட்டதாக வெளிப்படும். எனவே நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்லோர்களுடன் பழக வேண்டும். உடலையும், மனதையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் நல்ல ஆரோக்கிய வாழ்வை அடைகின்றனர்.

No comments:

Post a Comment