Wednesday, September 17, 2014

இருமலுக்கு இயற்கை வைத்தியம்:

கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.

தொடர்ச்சியான இருமல்:

இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.

சிற்றிருமல்:

நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.

இரைப்பு இருமலுக்கு:

இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.

கோழை இருமல்:

நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.

வறட்டு இருமல்:

வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.

உடல் சூட்டினால் இருமல்:

உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.

எந்த வகையான இருமலுக்கும்:

பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.

கக்குவான் இருமலுக்கு:

கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

ஜலதோஷம் காரணமாக இருமல்:

ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.
இடுப்பு-கை-கால்-தலை வலிகளைப் போக்க எளிய வழி (அக்குபிரஷர்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
கல்லீரல், பித்தப்பை போன்ற உறுப்புக்களில் உண்டாகும் பாதிப்பு, சிறுநீரகத்தின்( Kidney) செயல்பாட்டில் பிரதிபலிக்கும். 
இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாகவோ (அ) குறைந்தோ காணப்பட்டு, எலும்புகள்(bones), எலும்பு மஜ்ஜை (bone marrow), எலும்புகளைப் இணைக்கும் தசைநார்கள் (ligaments), தசை நாண்கள் (tendons), தசைகள் (muscles) இவ்வுறுப்புகளில் சில பாதிப்புகளை உண்டாக்கும்.

இந்த உறுப்புகளில் உண்டாகும் பாதிப்பை நமது உடல், இடுப்புவலி, நரம்புகள் பிடிப்பு, சுளுக்கு, கழுத்து சுளுக்கு, தலைவலி, மயக்க உணர்வு, கை, கால் மரத்துப் போதல், காதிரைச்சல் (tinnitus) போன்ற வலிகள் மூலம் வெளிப்படுத்தும்.

கல்லீரல் - பித்தப்பை, சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளில் உண்டான தடைப்பட்ட இயக்கத்தை சீராக்கவும், அந்த உறுப்புகள் வெளிப்படுத்திய நோயின் அறிகுறிகளைப் போக்க அக்குபிரஷர் முறையில் எளிய வழி உள்ளது..

கணுக்கால் முட்டியின் மேற்புறம் (படத்தில் காட்டியுள்ளது போல) ஒரு நிமிடம் நன்கு அழுத்திப் பிடித்துக் கொண்டு நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும். பின் மெதுவாக அழுத்தம் கொடுப்பதை நிறுத்தி விட்டு ஒரு நிமிடம் அந்த இடத்தில் கட்டை விரலால் தடவி விட வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் நமது உடல் வெளிப்படுத்திய அறிகுறிகள் (வலிகள்) கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நமது உடல் புத்துணர்ச்சி பெறுவதை நன்கு உணரலாம்...ஒரு நாளில் வலியைப் பொறுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.

இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்

117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.
13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.
18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.
19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.
23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.
24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.
25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.
26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.
29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.
30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.
31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.
32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.
37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.
38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.
41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.
42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.
44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.
46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.
51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.
67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்துவேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்துபாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.
79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.
80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.
81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.
82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.
83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.
86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.
88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.
90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவரகண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.
91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.
92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.
95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர,நரம்பு தளர்ச்சி நீங்கும்.
96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.
97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.
98)நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
99)தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
100)தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
101)தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
102)வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
103)உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
104)அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
105)குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
106)வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
107)வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
108)மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
109)சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
110)பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
111)மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
112)சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
113)தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
114)மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
115)தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
116)மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
117)வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாக

Monday, September 1, 2014

கவலை

கவலை
* * * * * * * 
ஒரு பொருளின் மீது மற்றொரு பொருள் ஏற்படுத்தும் தாக்கம் மனஇறுக்கம், மனபாரம், மனஅழுத்தம் என பல நிலைகளை கடந்து கவலையாக முழு பரிமாணத்தை அடைகிறது. உறுதியின்மையும், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் போது அதை பற்றியே சிந்தித்து சிந்தித்து நமக்கு நாமே அடையும் மன உளைச்சலின் போது நமக்குள் தோன்றும் ஒருவகை உணர்ச்சி தான் கவலை.

வேலையை செய்து முடிப்பதில் தாமதம், போக்கு வரத்து நெரிச்சல், தேர்வுகள், பதவி உயர்வு பற்றிய சிந்தனை , போட்டி, பொறமை முதலான மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும்போது கவலை தானே தோன்றி விடுகிறது. கவலைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. சிலர் எப்போதும் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தைப் பற்றியும், வேறு சிலர் மற்றவர்களைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
கவலைகளில் இரண்டு வகை உண்டு.
1.சுயநலமான கவலை
2.பொதுநலமான கவலை.
மற்றவர்களைப் போல தனக்கும் வாழ்க்கை அமையவில்லையே என்ற கவலை. நாளை நம் நிலை என்னவாகுமோ என்ற கவலை.
இப்படியே கவலை நம் மனத்தையும், உடலையும் ஆக்கரமித்து எப்படியெல்லாம் நம் உடலைப் பாதிக்கும் என்பதை இனி பார்ப்போம்.
கவலையால் அதிகம் பாதிப்பை தோல் தான் சந்திக்கிறது. தோல் வியாதிகளை அதிகமாகவும், குணமாகாமலும் இருக்க காரணம் இந்த ஸ்ட்ரெஸ் எனும் கவலை தான். தோலில் மட்டுமே ஸ்கின் ரேஷேஸ் எனப்படும் சிவப்பு திட்டுகள், கொப்புளங்கள், வெடிப்புகள், சொரியாசிஸ், எக்சிமா என்று பலவிதத்தில் வெளிப்படும்.
மேலும் வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள், மனக்கவலை, மன உளைச்சல், கவனச்சிதறல், அமைதியின்மை, முன்கோபம், சிறிய சத்தம் கேட்டால் கூட எரிச்சல் அடைவது, தலைசுற்றல், தலைவலி, அசதி, இதயம் வேகமாக துடித்தல், மூச்சுத் திணறல், அதிக இரத்தஅழுத்தம், இதய நோய்கள், நெஞ்செரிச்சல், அதிகப்படியான கொழுப்பு சேருதல், பெப்டிக் அல்சர், உணவு ஒவ்வாமை, வாந்தி, திடீரென எடை குறைதல்/கூடுதல், இன்சுலின் சுரப்பதில் கோளாறு, நீரிழிவு, உடல் எதிர்ப்பு சக்தி இழத்தல், உடம்பில் எந்த இடத்திலும் திடீரென உண்டாகும் எரிச்சல், வெடிப்பு, தசை வலி, அஜீரணம், பக்கவாதம், வலிப்பு, உடல் நடுக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பேதி, மூட்டுகளில் வலி, மூட்டுகளில் அழற்சி, தோள்பட்டைகளில் வலி, கை, கால்கள் மரத்துபோதல், இடுப்பு வலி, உடலுறவில் ஈடுபாடின்மை, குழந்தையின்மை, தூக்கமின்மை, கனவுத்தொல்லை இதோடு இல்லாமல் இன்னும் தொடரும் நோய்கள் எண்ணிக்கை அதிகம் தானே ஒழிய குறைவில்லை.
வாழும் காலத்தில் நல்ல சிந்தனைகள், எண்ணங்கள், பொறமை, புறம்பேசுதல், ஏமாற்றுதல் அனைத்தையும் விட்டொழித்தால், கவலையே நம்மைப் பார்த்து குமுறி கவலையுறும்.
எந்த ஒரு விஷயமும் நிலையில்லை. நிரந்தரமுமில்லை. சந்தோஷம், துக்கம் இரண்டுமே வந்த விதத்தில் நம்மை விட்டு அகலும். பிறந்தவர்கள் இறந்து தான் ஆக வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் நிலையாக இருந்தால் கவலை நம்மை விட்டு விலகியோடும். இந்நிலையில் கவலையை நாம் ஏன் விடாமல் சுமக்க வேண்டும். இனி சுமப்பதா, இல்லை தூக்கி வீசுவதா என்ற முடிவு இனி உங்கள் கைகளில்!
சந்தோஷமும், துக்கமும் சாமியாரிடமும், டாக்டரிடமும் இல்லை. எல்லாமே நமக்குள்ளே, நம் காலடியில் கொட்டிக் கிடக்கின்றன. வேறெங்குமில்லை நமக்குள்ளே தேடினாலே போதும்.
தீர்வு: பிராணயாமம், சுவாசப் பயிற்சி, தியானம், கற்பனைகள், நல்ல புத்தகங்கள், எளிய உடற்பயிற்சி, நேர்மறையான எண்ணங்கள் மட்டுமே.