Friday, June 29, 2012

வர்மத்தின் மர்மங்கள்

னித உடலில் உயிர்நிலை  ஓட்டம் 108 பகுதிகளில் ஒடுங்கியிருக்கிறது.  இவைகள் வர்மஸ்தலங்களாகும். இந்த வர்ம ஸ்தலங்களின் சக்தி அனைத்தும் சுழிமுனை சுவாசத்தின் மூலம் திலர்த காலத்தில் ஒடுங்குகிறது.  

இந்த வர்ம ஸ்தலங்களின் சக்தியை உணர்ந்தவர்களே வர்ம ஆசான்கள்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசான்கள் இறை அருளோடு இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு மருத்துவம் செய்து வருகின்றனர்.

அவர்கள் அகத்தியர் அருளிய வர்ம பரிகார நூல்களை கற்றுணர்ந்து அதன் மூலம் நாடி நிதானம் அறிந்து நோய்களுக்கு மருத்துவம் செய்து வருகின்றனர்.

வர்ம பரிகார சிகிச்சை முறையானது இந்திய முறை மருத்துவத்தில் உள்ள சித்தா, ஆயுர்வேதா என்ற இரு பிரிவுகளுக்கும் முக்கிய மருத்துவப் பகுதியாக விளங்கி வருகிறது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் வர்ம பரிகார முறையானது அதிகம் கற்றுக்கொடுக்கப் படுவதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

 சித்த மருத்துவமானாலும் சரி, ஆயுர்வேத மருத்துவமானாலும் சரி,  அவற்றில் நரம்பியல் துறை, எலும்பியல் துறை ஆகியன மிக முக்கியமான பிரிவுகளாகும்.  ஆனால் இன்றைய பாடத் திட்டத்தில் இந்த பிரிவுகள் முழுமையாகக் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை.

இதனால் சித்தா, ஆயுர்வேத மருத்துவர்கள், நரம்பியல் மற்றும் எலும்பியல் துறைகளில் போதிய அனுபவம் இல்லாமல் இருப்பதைக் காணமுடிகிறது.  வெறும் சூரணம், செந்தூரம், கஷாயம், லேகியங்கள் மட்டும் இந்த மருத்துவ முறையில் இருப்பதாக  எண்ணியுள்ளனர்..

இந்திய  மருத்துவ முறை  சார்ந்த மருத்துவர்கள் எலும்பியல் துறை, நரம்பியல் துறை,  படிக்க அதிக ஆர்வம் காட்டாமல் இருப்பதற்குக் காரணம் இதுவே.  இதனால் இந்திய மருத்துவ முறை தோய்ந்து, தேய்ந்து செயலிழந்து காணப்படும் நிலையை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.

இத்தகைய நிலையால் இந்திய மருத்துவ முறையை படித்துவிட்டு ஆங்கில மருத்துவத்தை கையாண்டு சிகிச்சையளித்து அவல நிலைக்கு ஆளாகும் நிலைதான் தற்போது உள்ளது.
இந்திய முறை மருத்துவத்தில் நோய் தீர்க்கும் பல மருத்துவ முறைகள் உள்ளன.

சித்தர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் முறையில் தெள்ளத் தெளிவாக மருத்துவ முறைகளைக் கூறியுள்ளனர்.  குறிப்பாக அகத்தியர் வர்மப் பரிகார முறையில் தெளிவாக பல அரிய அற்புதமான சிகிச்சை முறைகளை தெரியப் படுத்தியுள்ளார்.  ஆனால் இன்றைய காலகட்டத்தில் கையில் கனியை வைத்துக்கொண்டு கனியாத காயைப் பறித்து உண்டு முகத்தைச் சுழிப்பது போல் இந்திய மருத்துவ முறை சார்ந்த மருத்துவர்கள் உள்ளனர்.

சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், இரண்டிலும் வர்ம முறை இல்லாத மருத்துவம் முழுமையான மருத்துவமாக இருக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

வர்ம மருத்துவத்தை எல்லா மருத்துவர்களும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்  என்பதை உணரும் காலகட்டம் வந்துவிட்டது.  ஒரு காலத்தில் எட்டாத கனி புளிப்பு என்பது போல் வர்ம மருத்துவத்தை படிக்காமல் விட்டுவிட்டு, இப்போது எப்படியாவது படிக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.

தற்போது வர்ம மருத்துவத்தின்  மாபெரும் சக்தியை அனைவரும் உணர்ந்துள்ளனர்.  இன்றைய சூழலுக்கு  இன்றியமையாத மருத்துவம் வர்ம மருத்துவம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வர்ம மருத்துவம்  சித்தா, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் முழுமையாகச் சேர்க்கப்பட வேண்டும்.  அனுபவமும், ஆற்றலும் மிகுந்த வல்லுநர்களைக் கொண்டு கற்பிக்கப்பட வேண்டும். இதனால், இந்த தலைமுறை  மாணவர்கள் வர்மம் கற்று சித்த, ஆயுர்வேத மருத்துவத்தை தலைசிறந்த மருத்துவம் ஆக்குவார்கள்.

No comments:

Post a Comment