Friday, July 27, 2012

விளக்கெண்ணெய்


விளக்கெண்ணெய் எடுக்கப் பயன்படும் “ஆமணக்கு” எனும் தாவரம், இந்தியாவில் பரவலாக எல்லாப் பாகங்களிலும் எண்ணெய்க்காகப் பயிரிடப்படுகிறது. உடலிற்கு குளிர்ச்சியைத் தரக்கூடிய இந்த வகை எண்ணெய் ஆமணக்கு விதைகளிலிருந்து வடித்தெடுக்கப்படுகிறது.
வெளிர்ப்பச்சையும், மஞ்சளும் கலந்த நிறமாகவோ அல்லது நிறமற்றதாகவோ இருக்கும். ஏதோ ஒரு வகை லேசான வாசனையும், கசப்பு சுவையும் குமட்டலை உண்டு பண்ணும் தன்மையுங் கொண்டது. குடல் சுவர்கள் சுருங்கி உணவுப் பொருளைத் துரிதமாகச் செல்வதை ஊக்குவிக்கிறது. பெயிண்ட், இங்க், கேசத் தைலங்கள், சோப்பு முதலியவை தயாரிக்க இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு விதையிலிருந்து ஆமணக்கு எண்ணெய் எடுக்கப்படுகிறது. இம்மரம் 5 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. மடல்களைக் கொண்ட இதன் இலைகள் பெரியதாக அகலமாக இருக்கும். இதன் கொட்டைகள் சாம்பல், கறுப்பு அல்லது பல நிறத்துடன் கோழி முட்டை வடிவில் இருக்கும். இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ முதலான நாடுகளில் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது.
ஆமணக்கு விதையிலிருந்து பச்சை எண்ணெய், ஊற்றின எண்ணெய் என்று இரண்டு வகையாய் எடுக்கப்படுகின்றன. வித்துகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, இயந்திரத்தின் மூலமாய் பருப்புகளை அழுத்திப் பிழியும் எண்ணெய் பச்சை எண்ணெய் எனப்படும். ஓர் அகண்ட கடாயில் நான்கு பங்கு நீர்விட்டு அதில் பருப்புகளை இடித்து ஒரு பங்கு சேர்த்து, தீயிட்டு எரிக்க, நெய் கக்கி நீர் மீது மிதக்கும். இதை அகப்பையால் எடுத்து சேர்த்து அதில் கலந்துள்ள நீரை அனலில் வைத்துப் போக்கினதே ஊற்றின எண்ணெய் எனப்படும். இருவகை முத்துகளின் எண்ணெயில் எது மலினமற்றுத் தூய்மையாயும், வைக்கோல் நிறமாயும், நறுமணத்துடனுமிருக்கிறதோ அதுவே மேலானது. எது அதிக மஞ்சள் நிறமாயும், கனமாயும், தெவிட்டலாகவுமிருக்கிறதோ அது தாழ்ந்தது.
வித்தின் ஓட்டை நீக்கிப் பருப்பைப் பச்சையாக அரைத்தாவது அல்லது ஒன்றிரண்டாய் நசுக்கி அனலில் வதக்கியாவது, கட்டிகளின் மீது வைத்துக் கடடிவர, கட்டிகள் எளிதில் பழுத்து உடையும். இவ்வித்தின் பருப்பை ஒன்றிரண்டாக பொடித்து சட்டியிலிட்டு வதக்கி துணியில் முடிந்து ஒற்றடமிட வயிற்றுவலி, கல்லடைப்பு, நீரடைப்பு, பக்கவலி முதலியன தணியும்.
மருத்துவ குணம் நிறைந்த விளக்கெண்ணெய் அனைத்து வகை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. வெளிப்பூச்சாக சருமத்திற்கும், கேசத்திற்கும் உபயோகப்படுகிறது. கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்குவிப்பதால் அனைத்து கேசத் தைலங்களிலும் முதலிடம் வகிக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவமுடிகள் வளரவும், கண்களுக்கு குளிர்ச்சியூட்டி, தூக்கத்தை வரவழைக்கவும் வல்லது.
விளக்கெண்ணெயுடன் ஆளி விதை மாவைக் கலந்து சிறிது சூடு செய்து, உடலில் தோன்றும் கட்டிகளுக்குப் போட அவை உடைந்து ஆறிவிடும்.
விளக்கெண்ணெய் உடல், கண், மூக்கு, செவி, வாய், இவைகளிலுண்டாகின்ற எரிச்சலை நீக்கும். உடலைப் பொன்னிறமாக்கும். குழந்தைகளைத் தாய் போல் வளர்க்கும். குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் வயிறு கழியக் கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதை கைக்குழந்தை, கிழ வயதுடையவர், சூல் கொண்டவர், பிள்ளை பெற்றவர், சீதபேதியால் வருந்துபவர்களுக்கும் அச்சமின்றிக் கொடுக்கலாம்.
பசியின்மை, வயிற்றுவலி இவற்றால் துன்புறுவோருக்கும் இதைத் தரலாம்.

No comments:

Post a Comment